காவிரி விவகாரம்: பாஜக உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

Published On:

| By Monisha

bjp announce fasting protest

காவிரி விவகாரம் தொடர்பாக கும்பகோணத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.

டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்கு பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து இன்று டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “2018 ஆம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி முயற்சியால், காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பெற்று, கடந்த ஐந்து ஆண்டுகளாக, எந்தப் பிரச்சினையும் இல்லாமல், தமிழகத்துக்கு காவிரி நதி நீர் கிடைத்து வந்தது. கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன், காவிரி நதி நீரைத் திறந்து விடாமல், திட்டமிட்டு தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

தன் கூட்டணியில் இருக்கும், காங்கிரஸ் கட்சியின், கர்நாடக மாநில அரசைக் கண்டித்து இதுவரையில் ஒரு வார்த்தை கூடப் பேசாத திமுக, சட்டசபையில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என்று சொல்லி, ஒரு கண்துடைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, தன் வழக்கமான தீர்மான நாடகத்தை திமுக திட்டமிட்டு அரங்கேற்றியிருக்கிறது.

சட்டசபை விவாதத்தில், அத்தீர்மானத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் பேசியபோது, அவரை முழுவதுமாகப் பேச விடாமல் குறுக்கீடு செய்வதும், ஒலிபெருக்கியை நிறுத்துவதும், அவரின் கருத்துக்களை மக்களிடத்தில் செல்ல விடாமல் ஒளிபரப்பை தடை செய்வதும் ஜனநாயகப் படுகொலையாகும்.

சட்டமன்றத்தில் திமுகவின் வரலாற்றுப் பிழைகளும், ஆண்டாண்டு காலத் தவறுகளும், மக்களுக்கு இழைத்த துரோகங்கள் அனைத்தும் வெளிவந்து விடுமோ என்ற பதட்டம் தான் தெரிந்ததே தவிர, விவசாயிகள் மீதோ, தமிழக மக்கள் மீதோ, திமுகவுக்கு எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழகத்துக்கும், கேரளா, கர்நாடகா அண்டை மாநிலங்களுக்குமிடையே தீர்க்கப்படாத நதிநீர்ப் பங்கீடு, அணை கட்டும் பிரச்சினை, கடந்த ஐம்பது ஆண்டுகளாக நிலவி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான சிக்கல்களும், பிரச்சனைகளும், திமுக ஆட்சிக்காலத்தில் உருவானவை. இவற்றுக்கான நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த முயற்சிக்காமல், வீண் நாடகமாடி நீண்டகாலமாக தமிழக மக்களை, திமுக ஏமாற்றி வருகிறது.

கர்நாடகா அணைகளில் 80%-திற்கும் அதிகமாக தண்ணீர் இருந்தும் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரைப் பெற்றுத்தர திறனின்றி நடத்துகின்ற போராட்டம் கண்டனத்துக்குரியது.

ஆட்சியில் உள்ள மாநில அரசு, தண்ணீரைத் தர மறுக்கும், தன் கூட்டணிக் கட்சியைப்பற்றி எதுவும் பேசாமல் மத்திய அரசைக் குறை கூறுவது, ஆளும் கட்சியின் திறமையின்மையைக் காட்டுகிறது. காவிரி தண்ணீருக்காக கண்துடைப்பு கடையடைப்பு நடத்துவது திமுகவின் கபட நாடகம். டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் ஏமாற்றும் வேலை.

பாஜகவின் சார்பிலே டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன்களை காப்பாற்றுவதற்காக, கும்பகோணத்தில், வரும் அக்டோபர் 16ஆம் தேதி திங்கட்கிழமையன்று, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். இந்த உண்ணா நோன்பு போராட்டத்தை முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்க, மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையிலே, கும்பகோணத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன், மாநிலப் பொதுச் செயலாளர் பொன்பாலகணபதி, மாநில விவசாய அணி தலைவர் ஜி கே நாகராஜ், பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும் இன்னும் பெருந்திரளாக விவசாயப் பெருமக்களும், பொதுமக்களும் பங்கேற்கிறார்கள்.

தங்களின் கூட்டணிக் கட்சி என்ற ஒரே காரணத்துக்காக, காவிரி நதி நீரைத் திறந்து விடாமல் வஞ்சிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டிக்காமல், அரசுமுறை நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அரசியல் லாபங்களுக்காக, நாடகமாடும் திமுக, தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கிறது. தொடரும் திமுகவின் துரோக வரலாற்றைத் தோலுரித்துக் காட்ட 16-10-2023 அன்று கும்பகோணத்தில் நடத்தப்படும், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

அத்திக்கடவு – அவினாசி திட்டம் எப்போது துவக்கம்? – துரைமுருகன் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share