ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக அதிகளவு பணப்பட்டுவாடா செய்வதாகவும், அதுகுறித்து மாநில தேர்தல் ஆணையத்துக்குத் தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதித் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் தென்னரசுவும் போட்டியிடுகின்றனர்.
அதிமுகவுக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆளும் கட்சியான திமுக, வாக்காளர்களுக்கு அதிகளவு லஞ்சம் கொடுப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டி வருகிறார்.
கடந்த ஜனவரி 29ஆம் தேதி, ‘பண பலத்தை நம்பி திமுக தேர்தலைச் சந்திக்கிறது. பணத்தால் எதையும் செய்ய நினைக்கிறார்கள்” என்று குறிப்பிட்டு அமைச்சர் நேருவும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் பேசும்படியான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 14) இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமுக கடந்த 22 மாதங்களாக எதுவும் செய்யவில்லை. தற்போது பணபலத்தால் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் திமுக இருக்கிறது.
கடந்த ஜனவரி 29ஆம் தேதி அமைச்சர் நேருவும், ஈரோடு கிழக்கு வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் பணம் விநியோகம் குறித்து பேசிய ஆடியோ க்ளிப்பை வெளியிட்டிருந்தோம்.
இதுகுறித்த முழு விவரத்தோடு பாஜகவின் மூத்த தலைவர்கள் மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர்.
அதில் ஜனநாயகத்தின் உணர்வைப் படுகொலை செய்யும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
கடந்த ஜனவரி 11ஆம் தேதி தேர்தல் அதிகாரியும், போலீசாரும் திருப்பூர் மாவட்டம், திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் சர்புதீனின் காரில் இருந்து பணம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த டோக்கன்களை பறிமுதல் செய்தனர்.
கடந்த வார இறுதியில் திமுகவினர் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் 2 கிலோ கறியை லஞ்சமாகக் கொடுத்தனர்.
ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ள திமுக அமைச்சர்கள், தொகுதியில் குறிப்பிட்ட இடத்தில் வந்து அமரும் வாக்காளர்களுக்கு ரூ.1000 கொடுக்கின்றனர். அதே இடத்தில் தொடர்ந்து 20 நாட்கள் அமர்ந்தால் ரூ5,000 வழங்கப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரின் பரப்புரையை மட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு செய்யப்படுகிறது.
பணப்பட்டுவாடா செய்யப்படுவது குறித்து மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தும் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஈரோட்டில் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரியா
”தண்ணீர் இருக்கும் எல்லா இடத்திலும் தாமரை மலராது” – முதல்வர் ஸ்டாலின்