‘முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா’வுக்கு ‘இந்தியா கூட்டணி’ எம்பிக்களின் ஆதரவு கிடைக்கும்: அமித்ஷா

Published On:

| By Mathi

Amit Shah Interview

பிரதமர், முதல்வர் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வகையும் மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணியின் எம்.பிக்களும் ஆதரவு தெரிவிக்கக் கூடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அமித்ஷா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: அரசியலமைப்புச் சட்ட 130-வது திருத்த மசோதா, தீவிர குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், 30 நாட்களுக்குள் பிணை பெறாவிட்டால் அவர்களது பதவியிலிருந்து தன்னிச்சையாக விடுவிக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது.

ADVERTISEMENT

இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும் போது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும். நாடாளுமன்றத்தில் இந்த மசோதா குறித்து அனைத்து அரசியல் கட்சியின் உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா அல்லது எந்தவொரு மசோதாவையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிடாமல் தடுப்பது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் சரியான ஜனநாயக நடைமுறை அல்ல. நாட்டின் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடைபெறும் விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டுமே இன்றி கூச்சல் மற்றும் அமளியில் ஈடுபடுவதாக இருக்கக் கூடாது.

ADVERTISEMENT

நாடாளுமன்றத்தில் மசோதாக்களை தாக்கல் செய்யவிடாமல் தடுக்கும் செயல்கள் ஜனநாயக நடைமுறை அல்ல. தங்களின் நடவடிக்கைகளுக்காக ஏதிர்க்கட்சிகள் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்த மசோதா எந்தவொரு எதிர்க்கட்சிக்கும் எதிரானதல்ல. முதலமைச்சர் பொறுப்பு வகிப்பவர்களையும் சட்ட வரம்புக்குள் கொண்டு வரும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளது. அரசு பொறுப்பில் உள்ளவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய முடியாது என்று மக்களிடையே எதிர்க்கட்சிகள் தவறாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த மசோதாவின்படி 30 நாட்களுக்குள் பிணை பெறுவோர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது. பிணை வழங்கும் உரிமை உயர்நீதிமன்றங்களுக்கும், உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. பிணை வழங்கப்படாத நிலையில், அவரது பதவியிலிருந்து விலக நேரிடும்.

ADVERTISEMENT

நாடாளுமன்ற அவை செயல்படுவது குறித்து ஆளும் கட்சி மட்டுமே முடிவு செய்ய முடியாது. எந்தவொரு மசோதா அல்லது அரசியல் சட்ட திருத்த மசோதா அவையில் ஆக்கப்பூர்வ விவாதங்களுக்கான சூழலை உருவாக்காத நிலையை ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை மக்கள் கவனித்து வருகின்றனர். இந்த சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறும். எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் அறத்தின் அடிப்படையில் ஆதரவு தெரிவிப்பார்கள். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share