முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான ஸ்மிருதி இராணி நடத்தி வரும் ‘கியுங்கி சாஸ் பி கபி பஹு தி 2′ என்ற தொலைக்காட்சி தொடரில் பில் கேட்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பன்னாட்டு தொழில் நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்டின் இணை நிறுவனர் பில்கேட்ஸ். இவர் கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் மூலம் சுகாதாரம், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார். தற்போது உலக பணக்காரர்கள் வரிசையில் 12 ஆவது இடத்தில் உள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிர்வாகத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள இவர், தனது சொத்தில் கணிசமான பகுதியை சமூக நலப் பணிகளுக்காக ஒதுக்கி உள்ளார்.
இந்நிலையில் மாமியாரும் முன்பு மருமகளாக இருந்தவளே என பொருள்படும் தலைப்பு கொண்ட ‘கியுங்கி சாஸ் பி கபி பஹு தி’ தொடருக்கான முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது. இதில் ஸ்மிருதி இரானி ஒருவருடன் வீடியோ காலில் பேசினார். அதில் , ‘ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா’ என தொடங்கும் ஸ்மிரிதி இரானி, ‘நீங்கள் அமெரிக்காவில் இருந்து நேரடியாக என் குடும்பத்துடன் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் உங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்’ என்றார்.
இதைத்தொடர்ந்து எதிர்முறையில் பேசியது பில்கேட்ஸ்தான் என உறுதிப்படுத்தியதோடு, இது வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என்றார். இதைத்தொடர்ந்து ‘கியுங்கி சாஸ் பி கபி பஹு தி’தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
பில்கேட்ஸ் ஏற்கனவே அமெரிக்காவின் டிவி தொடரான ‘தி பிக் பேங்க் தியரி’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
