பீகார் மற்றும் கேரளாவின் திருவனந்தபுரத்தில் வீசிய காற்று தமிழ்நாட்டிலும் வீசப் போகிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன் நடத்திய தமிழகம் தழுவிய பிரசார யாத்திரையின் நிறைவு விழா இன்று மாலை புதுக்கோட்டையை அடுத்த பாலநகரில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பியூஷ் கோயல், எல்.முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், அமித்ஷா உருவாக்கி உள்ள கூட்டணி ஆட்சி மாற்றத்துக்கான கூட்டணி. பீகாரில் 243 தொகுதிகளில் 202-ல் வெற்றி பெற்றுள்ளோம். அதற்கு காரணம் ‘சாணக்கியர்’ அமித்ஷாதான். அதே பீகார் காற்று, கேரளாவின் உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரத்தில் வீசிய அதே காற்று, தமிழ்நாட்டிலும் வீசப் போகிறது. அதற்குதான் அமித்ஷா இங்கே வந்திருக்கிறார்.
பாஜக கூட்டணியில் நிறைய கட்சிகள் வரப் போகின்றன. அமித்ஷாவின் லட்சியம் வெற்றி நிச்சயம். திமுக எப்போதும் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றது கிடையாது; திமுக எப்போதாவது வெற்றி பெறக் கூடிய கட்சி. 2021-ல் நாம் ஒன்றாக இருந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்.. வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை அமித்ஷா உருவாக்குவார் என்றார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோர் பேசினர்.
