தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் தேய்ந்து போன ஒரு கண்டெண்ட் என்றால் அது ’ஆண்களா? பெண்களா?’ தான். ஏறத்தாழ லட்சத்தி முப்பத்தி இரண்டு பட்டிமன்றங்கள் இதே தலைப்பில் நடந்துவிட்டன. இதுகுறித்து, முந்தைய எபிசோடிலும் நாம் குறிப்பிட்டிருந்தோம். தற்போது பட்டிமன்றத்தில் இருந்து உருவிய தீமில் நடக்கும் இந்த பிக் பாஸ் சீசனில் பட்டிமன்றமே டாஸ்காக வழங்கினால் என்ன? என்கிற ஐடியாவில் தான் இன்றைய பிக் பாஸ் டாஸ்க் வழங்கியிருக்கக் கூடும். சரி அதுபற்றி பேசுவதற்கு முன் அதற்கு முன் நடந்த பல சுவாரஸ்ய நிகழ்வுகளைப் பற்றி பார்ப்போம்.
பெண்கள் அணியிடம் ‘முத்துக்குமரன் கிட்ட ஜாக்கிரதையா இருங்க..!’ என அவர்களின் ஸ்லீப்பர் செல்லான பவித்ரா கூறுவதாக தொடங்கியது இன்றைய பிக் பாஸ் எபிசோட். அதைத் தொடர்ந்து ஆண்கள் பகுதியைச் சேர்ந்த கிச்சனுக்குள் வருவதற்கு இன்னும் கடுமையான விதிகளை விதிக்க வேண்டும் என அந்த அணியினர் திட்டமிட்டனர். அதை நடத்தவும் செய்தனர். அப்போது தண்ணீர் கேட்டு வந்து ஆண்களை வம்பிழுக்கும் முத்துக்குமரன், அதற்கு கும்பலாக அவரை கலாய்க்கும் ஆண்கள் அணி என காட்சிகள் கடந்தது. இதில், இந்த ஜெஃப்ரி – முத்துகுமரன் இடையேயான வாய்க்கால் தகராறை ஏனோ நம்மால் நிஜமாக பார்க்க முடியவில்லை. கேமுக்காக செய்யும் ஸ்ட்ராடஜி என்று தான் தோன்றியது.
அடுத்ததாக வீட்டின் பணியை எந்த அணி செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் டாஸ்க்கில் கடுமையான போட்டி நிலவ, கடைசி போட்டியில் முத்துக்குமரனின் வயர் பிஞ்சி போக வெற்றிக் கனி ஆண்கள் இடத்தில் சேர்ந்தது. ஆக, வீட்டுப் பணி பெண்களுக்கே. இந்த டாஸ்கிலும் சரி இதற்கு அடுத்ததாக நடத்தப்பட்ட பட்டிமன்றம் டாஸ்கிலும் சரி, பெண்கள் அணியின் நம்பிக்கையை ஏறத்தாழ பெற்றுள்ளார் முத்துக்குமரன். பட்டிமன்றம் டாஸ்கில் ‘நம்பிக்கைக்கு உரியவர்கள் ஆண்களா? பெண்களா? ‘ என்கிற தலைப்பில் பேசிய இரு அணியில் பெண்கள் அணி பேசியதே மிகச் சிறப்பாக முற்போக்காக இருந்தது. ஆண்கள் அணியில் பேசிய ரவீந்தர் கொஞ்சம் தெளிவாக பேச முயற்சித்தாலும், அவர் வைத்த கருத்துகளில் அரசியல் தெளிவில்லை. மேலும், ‘யெஸ் ஆல் மென் ( yes all men)’ போன்ற ஹாஸ்டேக்கள் முன்னிறுத்தவும் வாதிக்கப்பட்டுக்கொண்டு வரும் தற்காலத்தில் ரவீந்தரின் கருத்துகள் அவ்வளவு ஏற்புடையதாக இருக்காது.
இன்றைய எபிசோடின் புரோமோவில் மிக ஆவேசமாக காட்டப்பட்டது ரவீந்திரன் – ரஞ்சித் இடையே நிகழ்ந்த கைகலப்பு காட்சியே. சோபாவை தூக்கி அடிக்க முயன்ற ரஞ்சித், அவரைத் தடுக்கும் சில ஹவுஸ்மேட்ஸ். மறுபக்கம், ஆவேசமாக கத்தும் ரவீந்தர், அவரைத் தடுக்கும் சில ஹவுஸ்மேட்ஸ் என அந்த புரோமோவை கண்ட உடன் நமக்கு தோன்றியது 50 நாட்களில் செய்ய வேண்டிய சீனை 10 ரீலுக்கு முன்னாடி செய்கிறார்களே என்பது தான். ஆனால், அந்த புரோமோ வெளியாகி சில மணி நேரத்தில் இந்த ஒட்டுமொத்த சண்டையும் திட்டமிடப்பட்ட ஒரு பிராங்க் தான் என்கிற தகவல் 24 மணி நேர நேரலை பார்ப்பவர்களிடத்தில் இருந்து வீடியோ கிளிப் ஒன்று வெளியானது.
ஆக, இங்கு பிராங்க் ஆனது ஹவுஸ்மேட்ஸ் மட்டுமல்ல மக்களும் தான். சரி, மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்டு புரோமோ கட்டிங் செய்வது பிக் பாஸில் புதிதல்ல. ஆனால், இந்த பிராங்க் வீட்டின் பெண்கள் அணியை சேர்ந்த ஹவுஸ்மேட்ஸை கடுமையாக பாதித்துவிட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகளை வீட்டுக்குள் பார்க்க முடிந்தது. ஒரு வீட்டிற்குள் இப்படியான வன்முறை சம்பவங்கள் நடக்கும் போது, அது நிச்சயம் பிற நபர்களை உளவியல் ரீதியாக பாதிக்கும். மேலும், இந்த பிராங்க் – ஐ பொறுத்தவரை புரோமோவில் வருவதற்காக மட்டுமே செய்யப்பட்ட ஸ்டண்டாக தெரிந்தது. அது சரியான விளையாட்டாக இருக்காது.
அதைத் தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸிடம் நிகழ்ந்த வாக்குவாதத்தில் சம்மந்தமே இல்லாது கத்திய பவித்ராவின் ரியாக்ஷன் அபத்தமே. ஆனால், இன்றைய டாஸ்க்களின் முடிவுகளை அறிவித்தது, பல பிரச்சனைகளை நடுநிலையாக அணுகியது என பல இடங்களில் வீட்டின் தலைவராக சிறப்பாக செயல்பட்டுள்ளார் இந்த சீசனின் முதல் தலைவரான தர்ஷிகா. மொத்தத்தில், இன்றைய எபிசோட் ஹவுஸ்மேட்ஸுக்கு மட்டும் பிராங்க் அல்ல, நமக்கும் தான். பிக் பாஸ் என்றாலே, சண்டைகள், வாக்குவாதங்கள், என்பது போல கண்டெண்ட் செய்யாமல் கொஞ்சம் சுவாரஸ்யமான டிராமா கலந்த கண்டெண்ட்களை தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கக் கூடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் : ஸ்டாலின் உத்தரவு!
ரத்தன் டாடா மறைவு… அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு : மகாராஷ்டிரா அரசு