இந்த சீசனின் மிகவும் மோசமான வாரமாக இந்த வாரம் இருந்து வருகிறது. Bigg Boss Season 7 Day 47
பிரதீப்பின் ரெட் கார்ட் வெளியேற்றத்திற்கு பின்னர் நடந்த பெரிய கலவரத்திற்கு பிறகு, எந்த வித சுவாரஸ்யமான கண்டெண்ட்களையும் பிக் பாஸில் பார்க்க முடிவதில்லை என பார்வையாளர்களே சலித்துக்கொண்டிருக்கும் நிலையில், தினந்தோறும் விடாமல் 24×7 லைவில் பார்க்கும் பார்வையாளர்களும், ‘தயவு செய்து எதாச்சும் போர்(Bore) அடிக்காமல் பண்ணுங்க’ என பிக் பாஸ் குழுவிடமே கதறி மன்றாடும் சில பதிவுகளையும் சமூக வலைதளங்களில் காணமுடிகிறது.
அந்த வகையில், நவ.16 எபிசோட் மிகவும் சுவாரஸ்யம் இல்லாத இந்த வாரத்தின் மற்றொரு எபிசோட் என்றே சொல்ல வேண்டும். மணி குறித்து விஷ்ணுவிடம் சில புகார்களை மாயா வைப்பதாக இன்றைய எபிசோட் தொடங்கியது.

நவ.15 அன்று பிக் பாஸ் அறிவித்த character swapping டாஸ்க்கின் வெளிப்பாடு தான் அது. மாயா – பூர்ணிமா கதாபாத்திரங்களை விஷ்ணு – மணி ஏற்று செய்யும் போது சில உண்மைக்கு முரண்பாடான விஷயங்களை செய்கின்றனராம். அப்படி பார்த்தால் இந்த டாஸ்கில் விளையாடிய அனைத்து ஹவுஸ்மேட்ஸுமே கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதை தாண்டி அதில் தங்களின் தனிப்பட்ட வன்மங்களை வெளிப்படுத்துவதே அதிகமாக உள்ளது என்பது வேறு கதை. ஆனால், இத்தகைய குற்றசாட்டை மாயா வைப்பது தான் பெரும் முரண்.
அடுத்ததாக, பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்டு விஷயம் குறித்து விசித்ராவிடம் மீண்டும் ஒரு முறை விளக்கமளிக்கிறார் மாயா. அவர் வெளியேறி இரண்டு வாரங்கள் நிறைவாகவிருக்கும் நிலையில், இன்றும் அதை மாயா விசித்ராவிடம் விளக்கி நட்பை உருவாக்க நினைப்பதில் இருக்கும் விளையாட்டு தந்திரம் பிக் பாஸ் பார்வையாளர்கள் அனைவருக்கும் அறிந்த ஒன்றே.
‘எனக்கு வெளிய இருந்த trauma தான் நான் குரல் எழுப்பியதற்கும், அப்படி நடந்துகொண்டதற்கும் காரணம். மற்றபடி உங்களை bully செய்வது எனது நோக்கம் அல்ல’ என விசித்ராவிடம் மாயா சொன்னது வேடிக்கையாகவே இருந்தது. இருப்பினும் கமல்ஹாசனே அதை ஏற்றுகொண்டுள்ள நிலையில், விசித்ரா என்ன செய்ய முடியும்? மேலும் இது பெண்கள் குறித்த பிரச்சனை என உருவெடுத்த காரணத்தால் ஏறத்தாழ அதை ஏற்கும் வகையில் மாயாவை கட்டி அணைத்து அந்த உரையாடலை விசித்ரா நிறைவு செய்தது அந்த சூழலுக்கு சரியான நகர்வு தான்.

மாயா சொன்ன அந்த ‘trauma’ காரணத்திற்கு கவுண்டராக மணியிடம் விஷ்ணு பேசும் கிளிப்பை அடுத்ததாக வைத்தது பிக் பாஸ் எடிட்டரின் எடிட்டிங் திறமையைக் காட்டியது. ’இவங்களாம் traumaன்னு சொல்றாங்க. அப்போ இவங்க பண்றதுல மத்தவங்க பாதிக்கப்படுறத என்ன சொல்றது? என்னோட கேரக்டர எடுத்து பண்றப்போ எவ்வளவோ இல்லாத விஷயங்கள மக்கள்கிட்ட காட்ட முயற்சி பண்ணாங்க அதுக்கெல்லாம் என்ன சொல்றது? நான் எதையும் கண்டுக்க மாட்டேன்’ என விஷ்ணு சொன்ன கருத்துகளில் சிறிதளவு உண்மையும் இருந்தது. அவர் இந்த கேமை மிகவும் உன்னிப்பாக கவனித்து ஆடுவதும் தெரிந்தது.
கேரக்டராக இருக்கிறோம் என சொல்லிக்கொண்டு ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸும் மாறி, மாறி ஓவராக நடித்து வன்மத்தை கொட்டியதை அடுத்ததாக பார்க்கும் போது, இந்த கேரக்டர் சுவாப்பிங் (character swapping) டாஸ்கை தயவுசெய்து நிறுத்திவிடுங்கள் பிக் பாஸ் என்றே சொல்லத் தோன்றியது. அந்த எண்ணம் பிக் பாஸுக்கும் வந்ததனால் தான், ‘நீங்க நடிச்சதெல்லாம் போதும் நானே ஒரு கான்செப்ட் சொல்றேன் அதையே நடிங்க’ என இரு குழுவுக்கும் இதையே மூன்று தலைப்புகளில் ஒரு விவாத டாஸ்க்கை நடத்தினார்.

அதிலும் தினேஷ் மீதிருந்த வன்மத்தை பூர்ணிமா கொட்டித் தீர்த்தார். அவரை எதோ ஒரு ஆணாதிக்கவாதி, பிற்போக்குவாதி போல காட்சிப்படுத்த பூர்ணிமா முயற்சி செய்தது அப்பட்டமாகத் தெரிந்தது. அந்த வாதத்தை முடிக்கும் போது பூர்ணிமா, ‘பிக் பாஸ் டைட்டில் வின்னர் யாரு? நான் தான்’ என சொல்லி முடிப்பதற்குள், ‘அது சரவண விக்ரம்’ நமது டைட்டில் வின்னர் கூறியது மட்டுமே இன்றைய எபிசோடில் நம்மை பலமாக சிரிக்க வைத்த ஒன்று.
அதை புரோமோவில் வைத்து நமது சரவண விக்ரமை ஸூம்(zoom) செய்து காட்டியது பிக் பாஸ் எடிட்டரின் குசும்பு வேலை. ‘Trigger சக்தி’, ‘விஷ ஜூலி’, ’சூனியக்காரி மாயா’ என்கிற வரிசையில் ‘டைட்டில் வின்னர் சரவண விக்ரம்’ என்றும் நிலைப்பார் என்பதே சான்றோர் கருத்து.
இந்த விவாத டாஸ்கில் பெண்கள் கதாபாத்திரங்களை ஏற்று நடித்த ஆண்களே வெற்றி பெற்றனர். கோல்டன் ஸ்டாரை அதில் ஒருவருக்கே வழங்க வேண்டும் என பிக் பாஸ் சொல்ல, அதை அனைவரும் சேர்ந்து மணிக்கு வழங்கலாம் என முடிவெடுத்தனர். இந்த முடிவு மாயாவிற்கு பிடிக்கவில்லை. ஆமாம், அவரின் குழுவைச் சேர்ந்த அனைத்து தகுதிகளையும் பெற்ற டைட்டில் வின்னர் சரவண விக்ரமிற்கு தராமல் அவரது எதிரியான மணிக்கு தந்ததை மாயாவால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? ஆகையால், அதுகுறித்து அனைவரிடத்திலும் புலம்பிக் கொண்டிருந்தார் மாயா.

அப்படி புலம்பும் போது, ‘மணியை விட விக்ரம் தான் சிறந்த ஆட்டக்காரர்’ என மாயா கூறியது மற்றொரு நகைச்சுவை காட்சியாக இந்த எபிசோடில் அமைந்தது. அதைத் தொடர்ந்து விஷ்ணு – பூர்ணிமா தனியாக அமர்ந்து பேசும் காட்சியும், அதற்கு கவுண்டராக விசித்ரா – தினேஷ் பேசும் காட்சியும் மாறி மாறி வந்தது பிக் பாஸ் எடிட்டரின் மற்றொரு கைவரிசை.
‘விக்ரம்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒற்றை ஆளாக நமது ஆண்டவர் பீரங்கியை இழுத்து வருவது போல், சுவாரஸ்யமே இல்லாத நேற்றைய (நவ.16) எபிசோடை சுவாரஸ்யமாக்க பிக் பாஸ் எடிட்டர் முயற்சி செய்வதை அந்த தருணத்தில் உணர முடிந்தது.
விஷ்ணுவிடம் ஏறத்தாழ தனது காதலை சொல்லும் பாணியில் பூர்ணிமா பேச, ‘நீ நல்ல பிளேயர். ஆனா நல்ல பாதையில் இல்லை என்றே தோன்றுகிறது. வெளியே உனக்கு நிலமை சரியில்லை’ என பூர்ணிமா குறித்து விஷ்ணு கணித்தது சிறந்த கணிப்பு. அதைத் தொடர்ந்து வழக்கமான ஒரு புரொமோஷன் டாஸ்கை பிக் பாஸ் அறிவிக்க, அந்த டாஸ்க் நம்மை மேலும் சலிப்படையச் செய்ய, அப்படியே நிறைவானது பிக்பாஸ் நாள் 45ன் எபிசோட். Bigg Boss Season 7 Day 47
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
பியூட்டி: முகத்தை ‘பளிச்’ ஆக்கும் கொரியன் டிப்ஸ்!
