RBL வங்கி தனது நிதி நிர்வாகப் பொறுப்புகளை மிகுந்த அனுபவம் வாய்ந்த ஒருவரிடம் ஒப்படைக்கத் தயாராகி வருகிறது. HDFC வங்கியின் முன்னாள் மூத்த அதிகாரியான பாவின் லக்பத்வாலா (Bhavin Lakhpatwala), விரைவில் RBL வங்கியின் புதிய தலைமை நிதி அதிகாரியாக (CFO) பொறுப்பேற்கவிருக்கிறார். இந்த நியமனம் குறித்த செய்தி வெளியானதும், வங்கியின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்தது. இது வங்கியின் பங்கு விலைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஜூன் 11 அன்று, RBL வங்கியின் பங்கு விலை கிடுகிடுவென உயர்ந்து கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை எட்டியது. Emirates NBD உடனான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மிகப்பெரிய ஒப்பந்தத்திற்குப் பிறகு, வங்கி எடுத்துள்ள முதல் முக்கிய முடிவாக இது கருதப்படுகிறது. எந்தவொரு நிறுவனத்திற்கும் வலுவான தலைமை கிடைக்கும்போது, சந்தை உடனடியாக நேர்மறையான எதிர்வினையை வெளிப்படுத்துகிறது. ஜூன் 11 அன்று RBL வங்கிப் பங்குகளின் விஷயத்திலும் இதேபோன்ற சூழல் நிலவியது.
உயர்மட்ட நிர்வாகத்தில் மாற்றம் குறித்த செய்தி முதலீட்டாளர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் வங்கியின் பங்கு விலை 2.37 சதவீதம் உயர்ந்து ரூ.364.75-ஐ எட்டியது. இது கடந்த 52 வாரங்களில் அதன் மிக உயர்ந்த நிலையாகும். இருப்பினும், லாபப் பதிவு (profit-booking) காரணமாக இந்த ஏற்றம் சிறிது மந்தமடைந்தது. காலை 10:40 மணி நிலவரப்படி, அதன் பங்கு 1.67 சதவீதம் உயர்ந்து ரூ.362.90-க்கு வர்த்தகமானது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, RBL வங்கிப் பங்குகள் 15 சதவீதத்திற்கும் அதிகமான அபார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
பாவின் லக்பத்வாலா வரும் வாரங்களில் இந்தப் முக்கியப் பொறுப்பை ஏற்பார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC வங்கியிலிருந்து லக்பத்வாலா சமீபத்தில் ராஜினாமா செய்தார். 2011 முதல் HDFC வங்கியில் பணியாற்றி வந்த அவர், அங்கு ‘மூத்த நிர்வாகத் துணைத் தலைவர்’ (Senior Executive Vice President) போன்ற முக்கியப் பதவியை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
