கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் (பொறுப்பு ) பதிவாளராக இருந்த பேராசிரியர் ரூபா குணசீலன் , பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. துணை வேந்தர் பணியிடத்தை நிரப்புவதற்காக பொறுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல பல்கலை கழக பதிவாளர் பணியிடமும் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்தது. இந்த சூழலில் கடந்த 2023 பிப்ரவரி மாதம் முதல் 2025 ஆகஸ்ட் வரை பேராசிரியர் ரூபா குணசீலன் என்பவர் பொறுப்பு பதிவாளராக இருந்தார்.
அப்போது அவர் மீதான ஏராளமான முறைகேடு புகார்கள் தமிழக ஆளுநருக்கு சென்றது.
பதிவாளர் பொறுப்பில் இருந்தபோது ரூபா குணசீலன் விதிமுறைகளை மீறி செயல்பட்டது. பல்கலைக்கழக நிதி குழு மற்றும் சிண்டிகேட் ஒப்புதல் இன்றி பணிகளை மேற்கொண்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ரூபா குணசீலன் மீதான புகார்களை விசாரிக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டிருந்தார்.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பார்த்தசாரதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்த நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொண்ட அவர் அறிக்கையினை தமிழக ஆளுநரிடம் அளித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக ராஜவேல் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று பேராசிரியர் ரூபா குணசீலனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேல்முறையீடு தாக்கல் செய்யத் தவறியது, சிண்டிகேட் இயக்குநர்களின் உத்தரவுகளைப் பின்பற்றத் தவறியது, விதிமுறை மீறல், கீழ்ப்படியாமை, சிண்டிகேட் & நிதிக் குழுவின் அனுமதியின்றி நியமனங்கள் மேற்கொண்டது, நிர்வாக நடைமுறைகள் மற்றும் சட்டங்களை மீறியது போன்ற காரணங்களால் பணியிடை நீக்கம் செய்வதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் பணி இடைநீக்க காலத்தில், பாரதியார் பல்கலைக்கழக சட்டப்படி அனுமதிக்கப்பட்ட வாழ்வாதார உதவித்தொகை மற்றும் அகவிலைப்படி வழங்கப்படும் என்றும், இடைநீக்க காலத்தில் கோயம்புத்தூரிலேயே இருக்க வேண்டும், உரிய அனுமதியின்றி கோவையை விட்டு வெளியேறக் கூடாது என்றும் அந்த உத்திரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொறுப்பு பதிவாளர் ரூபா குணசீலனை பணியிடை நீக்கம் செய்து, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேர்வு குழு உறுப்பினர் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் ராஜவேல் நடவடிக்கை எடுத்து இருப்பது பல்கலை கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
