ADVERTISEMENT

அமர்த்தியா சென் மரண செய்தி… ’வதந்தி’ என உறுதி செய்த மகள்!

Published On:

| By christopher

Bharat Ratna Amartya Sen is alive

அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார வரலாற்றாசிரியரும், தொழிலாளர் பொருளாதார நிபுணருமான கிளாடியா கோல்டின் 2023ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட அவரது கோல்டினின் போலி ’எக்ஸ்’ தள கணக்கில் இருந்து, பாரத ரத்னா மற்றும் நோபல் பரிசு பெற்ற இந்தியாவைச் சேர்ந்த பிரபல பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் இன்று இறந்துவிட்டதாக செய்தி வெளியானது.

ADVERTISEMENT

Bharat Ratna Amartya Sen is alive

இந்த செய்தி சர்வதேச மற்றும் தேசிய ஊடகங்களில் சரிபார்க்கப்படாமல் வெளியான நிலையில், சமூக ஊடகங்களில் அமர்த்தியா சென் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவிக்க தொடங்கினர்.

ADVERTISEMENT

எப்போதும் போல் பிஸியாக உள்ளார்!

இந்த நிலையில், அமர்த்தியா சென் மரணச் செய்தி வதந்தி என்றும் அவர் உயிருடன் நலமாக இருப்பதையும் அவரது மகள் நந்தனா சென் தற்போது உறுதி செய்துள்ளார்.

ADVERTISEMENT

அதே எக்ஸ் தளத்தில் போலி செய்திக்கு பதிலடியாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“நண்பர்களே, உங்கள் அக்கறைக்கு நன்றி. ஆனால் அது பொய்யான செய்தி. அப்பா(அமர்த்தியா சென்) நன்றாக இருக்கிறார். கேம்பிரிட்ஜில் குடும்பத்துடன் ஒரு அற்புதமான வாரத்தை நாங்கள் ஒன்றாகக் கழித்தோம்.

நேற்றிரவு நாங்கள் விடைபெறும் போது அவரது அணைப்பு எப்போதும் போல் வலுவாக இருந்தது! அவர் ஹார்வர்டில் வாரத்திற்கு 2 படிப்புகளை மாணவர்களுக்கு கற்பிக்கிறார்.

புத்தகம் உருவாக்குவதிலும் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார். குறிப்பாக எப்போதும் போல் பிஸியாக அவர் இருக்கிறார்!” என்று நந்தனா சென் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/nandanadevsen/status/1711716130144841880

தற்போது எங்கு எப்படி இருக்கிறார் அமர்த்தியா சென்?

இந்தியாவின் பெங்காலி குடும்பத்தில் பிறந்த அமர்த்தியா சென், தற்போது 89 வயதான நிலையிலும் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தத்துவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

மேலும் பொதுநலப் பொருளாதாரம் மற்றும் சமூகத் தேர்வுக் கோட்பாடு முதல் பொருளாதாரம் மற்றும் சமூக நீதி மற்றும் பொது சுகாதாரம் வரை பல துறைகளில் சென் முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

அவர் தனது பணிக்காக 1998ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார். அதற்கு அடுத்த ஆண்டில் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெற்றுள்ளார்.

இதுமட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட கௌரவப் பட்டங்களைப் பெற்றுள்ள அமர்த்தியா சென், பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: இந்தியாவின் நகை வர்த்தகத்தில் கடும் பாதிப்பு!

காவிரியாக ஓடும் கள்ளச்சாராயம் : கண்டுக்கொள்ளுமா காவல்துறை?

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: இந்தியாவின் நகை வர்த்தகத்தில் கடும் பாதிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share