சசிகலா விடுதலை எப்போது: சிறை நிர்வாகம் பதில்!

Published On:

| By Balaji

சசிகலா எப்போது விடுதலையாவார் என்ற கேள்விக்கு பெங்களூரு சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்ததால் 2017 பிப்ரவரி மாதம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 4 ஆண்டுகள் சிறை தண்டனைக் காலம் வரும் பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

ADVERTISEMENT

இதே வழக்கில் ஜெயலலிதாவோடு சிறையில் இருந்த நாட்கள், சிறை விதிகளின்படியான சலுகைகள், அவருக்கான விடுமுறை நாட்கள் ஆகியவற்றின் காரணமாக சசிகலா இன்னும் சில மாதங்களில் விடுதலையாவார் என்று அமமுகவினரிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுபோலவே, சசிகலாவை வெளியே கொண்டு வருவதற்கான சட்டப்பூர்வ நடைமுறைகளை தினகரன் தரப்பு செய்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த தகவலறியும் உரிமை ஆர்வலர் டி.நரசிம்ம மூர்த்தி என்பவர், சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஜூன் 6ஆம் தேதி பதிலளித்த சிறை நிர்வாகம், “குற்றவாளிகளின் விடுதலை தேதியைக் கணக்கிடுவதில் பல்வேறு விதிமுறைகள் உள்ளடங்கியுள்ளன. உதாரணமாக அபராதத் தொகை நிலையின் அடிப்படையில் கைதியை விடுதலை செய்யும் தேதி மாறுபடும். அதனால் சசிகலாவின் விடுதலை குறித்து சரியான தேதியை கொடுக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயும், சசிகலா உள்பட மற்ற 3 பேருக்கு தலா 10 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

**எழில்**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share