மகளுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த மாப்பிள்ளையுடன், பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு மணப்பெண்ணின் தாய் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. before 10 days of marriage mother in law elope with bridegroom
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் மட்ராக் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த தம்பதியர் ஜிதேந்திரகுமார் -அனிதா தேவி (வயது 40). இவர்களது மகள் ஷிவானி.
ஜிதேந்திரகுமார் பெங்களூருவில் வேலைபார்த்து வரும் நிலையில், அவரது மகள் ஷிவானிக்கு, உத்தரகாண்ட்டில் வேலை செய்யும் ராகுல் என்பவருடன் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது.
வரும் ஏப்ரல் 16ம் தேதி திருமண நடைபெற இருந்த நிலையில், அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு இரு குடும்பாத்தாரும் உறவினர்களுக்கு வழங்கி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 6ம் தேதி மணப்பெண்ணின் தாய் அனிதா தேவி, மணமகன் ராகுலுடன் மாயமாகி விட்டார். மேலும் வீட்டில் இருந்த ரூ.3.50 லட்சம் ரொக்கப்பணம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் தூக்கிச்சென்று விட்டார்.
இதுபற்றி மதராக் காவல்நிலையத்தில் புகார் அளித்த மணப்பெண் ஷிவானி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறுகையில், “எனக்கு ஏப்ரல் 16ஆம் தேதி ராகுலுடன் திருமணம் நடக்க இருந்தது. என் தாய் கடந்த 6 ஆம் தேதி அவனுடன் ஓடிவிட்டார். ராகுல் என் தாயாருக்கு போன் வாங்கி கொடுத்த நிலையில், இருவரும் கடந்த மூன்று நான்கு மாதங்களாக போனில் அதிகம் பேசி வந்தனர். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எங்களுக்கு கவலை இல்லை. என் தாயார் கொண்டு சென்ற பணம் மற்றும் நகைகளை எங்களிடம் திருப்பித் தர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அனிதாவின் கணவர் ஜிதேந்திர குமார் கூறுகையில், “கடந்த 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு தன் சகோதரியின் வீட்டிற்கு என்னை வரச் சொன்னார். ஆனால்அன்று இரவு 8:30 மணிக்கு நான் வீடு திரும்பியபோது, காலை முதல் அவள் காணாமல் போனதை அறிந்தேன். எல்லா இடங்களிலும் தேடியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. ராகுல் மற்றும் அனிதாவின் செல்போன்களும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அவள் எங்கே இருக்கிறாள், இதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை” என்று அதிர்ச்சியுடன் தெரிவித்தார்.
அலிகாரில் நடந்த இந்த வினோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்துள்ள மதராக் காவல்நிலைய அதிகாரி மகேஷ் குமார், மாயமான இருவரையும் தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.