கோடையில் இயற்கை நமக்களித்த முக்கிய உணவுப் பொருட்களில் கீரைக்கும் பீட்ரூட்டும் தனி இடமுண்டு. இவை இரண்டும் உடலில் தேங்கும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கோடையில் ஏற்படும் செரிமான பிரச்சினைகளுக்குச் சிறந்த நிவாரணியாகும். இந்த கீரை பீட்ரூட் பொரியலை குழம்புக்கு பதிலாக சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சைடிஷாகவும் பயன்படுத்தலாம்.
என்ன தேவை?
- முருங்கைக்கீரை இலைகள் – ஒன்றரை கப்
- பீட்ரூட் – கால் கிலோ
- சின்ன வெங்காயம் – 10
- பச்சை மிளகாய் – 2
- தேங்காய்த் துருவல் – கால் கப்
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கீரையைக் கழுவி சுத்தம் செய்யவும். பீட்ரூட்டைத் தோல் சீவி, நறுக்கி தனியே வேகவைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டுக் காயவைத்து நறுக்கிய சின்ன வெங்காயம், கீரை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தண்ணீர் தெளித்து மூடி போட்டு வைக்கவும். தீயை மிதமாக வைத்து நன்கு வேகவிடவும். பிறகு வெந்த பீட்ரூட் துண்டுகள், உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கி, தேங்காய்த் துருவல் சேர்த்துப் புரட்டி இறக்கவும்.
