எடப்பாடி-பன்னீர் பஞ்சாயத்து: இடையில் ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!

Published On:

| By admin

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக தெரிவித்துவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்போ பொதுக்குழுவை நடத்தியே தீருவது என்று ஒற்றைக் காலில் அல்ல ஒற்றைத் தலையில் நிற்கிறார்கள். எனவே இந்த பிரச்சினை இப்போது அதிமுக என்ற கட்சியைத் தாண்டி இப்போது தமிழக அரசின் கைகளுக்குச் சென்றுள்ளது.

வரும் ஜூன் 23 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
அந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை அதுவும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒற்றைத் தலைமை அளித்து தீர்மானம் நிறைவேற்ற அவரது தரப்பினர் தயாராகிவிட்டார்கள். இதை அறிந்துதான் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டுவரக் கூடாது என்று ஓ.பன்னீர் செல்வம் ஜூன் 16 ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதுகுறித்து இன்று (ஜூன் 20) வரை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கவில்லை, எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே பல்வேறு நிர்வாகிகள் பன்னீர் வீட்டுக்கும், பழனிசாமி வீட்டுக்கும் கடந்த நான்கைந்து நாட்களாக படையெடுத்து வருகிறார்கள். இவரை சந்தித்துவிட்டு அவரை சந்திப்பது, அவரை சந்தித்துவிட்டு இவரை சந்திப்பது என்று மாறி மாறி சந்தித்து வருகிறார்கள். இருவருக்கும் ஆதரவாக பலரும் பிரஸ்மீட் நடத்தி ஏட்டிக்கு போட்டியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜுன் 18 ஆம் தேதி அதிமுக தலைமைக் கழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான மாரிமுத்து என்பவர் தாக்கப்பட்டு ரத்தக் காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு கடந்த நான்கைந்து நாட்களில் பன்னீர் தரப்பும், பழனிசாமி தரப்பும் கிட்டத்தட்ட எதிரிகள் போலவே ஆகிவிட்டார்கள்.

பொதுக்குழுவை கூட்டுவதில் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்று (ஜூன் 20) காலை சென்னையை அடுத்து வானகரம் தனியார் திருமண மண்டபத்துக்கு சென்று பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், “அம்மா இதே மண்டபத்தில் பல முறை பொதுக்குழுவை நடத்தியபோது சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டனர். தற்போது அதே மண்டபத்தில்தான் பொதுக்குழு நடைபெறுகிறது. ஆனால் இடமில்லை என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை. முன்னறிவிப்பு இல்லாமல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சில நிர்வாகிகள் ஒற்றைத் தலைமை பற்றி கட்சி விதிகள் அறியாமல் கருத்து தெரிவித்தார்கள். இதனால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொண்டர்கள் கொதித்துப் போய் உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழலும் உள்ளது.

இதையடுத்து தொண்டர்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளேன். இந்த அசாதாரண சூழலில் நடைபெற இருக்கும் பொதுக்குழுவின் அஜெண்டா பற்றிய தகவல் தங்களுக்கு தரப்படவில்லை என்று மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர். இந்த நிலையில் கூட்டத்துக்கான பொருள், அஜெண்டா, நிர்ணயம் செய்து நடத்துவது அவசியமாகிறது என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே மேற்கண்டவற்றை கருதி செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தைத் தள்ளி வைக்கலாம். செயற்குழு, பொதுக்குழுவின் புதிய தேதியை நாம் கலந்து பேசி பிறகு அறிவிக்கலாம்’ என இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்” என்று கூறினார்.

அதேநேரம் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சில வழக்கறிஞர்களுடன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவரான பெங்களூர் புகழேந்தி இன்று டிஜிபி அலுவலகத்துக்கு சென்றார். “பொதுக்குழு கூட்டம் நடக்கும் வானகரம் பகுதியில் கலவரத்தைத் தூண்ட எடப்பாடி ஆதரவாளர்கள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக’ புகார் கொடுத்திருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “அதிமுக பொதுக்குழு நடக்கும் வானகரம் திருமண மண்டபத்துக்கு அருகிலுள்ள சில மண்டபங்களையும் வாடகைக்கு எடுத்து அதில் ரவுடிகளை கொண்டு வந்து வைத்துக் கொண்டு கலாட்டா செய்வதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு கெடுவதற்கு எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. மேலும், பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளரே ஒத்தி வைக்கலாம் என்று சொல்லிவிட்ட நிலையில் தொடர்ந்து பொதுக்குழுவை நடத்தினால், ரவுடியிசம் செய்வதற்குத்தான் தயாராக இருக்கிறார்கள் என்று அர்த்தம். அதனால் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொதுக்குழு நடத்துவதற்கு போலீஸ் அனுமதி கொடுக்கக் கூடாது” என்று கூறியிருக்கிறார்.

ஜூன் 20 இதேநேரத்தில் வானகரத்தில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம், வேலுமணி, கடம்பூர் ராஜூ, கரூர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரோடு பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி. அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய முனுசாமியிடம் பொதுக்குழுவை தள்ளி வைக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் எடப்பாடியிடம் வலியுறுத்தியிருப்பது பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கே.பி. முனுசாமி, “பொதுக்குழுவில் கலந்துகொள்ளுமாறு அனைத்து உறுப்பினர்களுக்கும் பதிவுத் தபால் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் அழைப்பைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலும் தலைமைக் குழுவுக்கு வந்துவிட்டது. எனவே திட்டமிட்டபடி எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் பொதுக்குழு கூடும். பொதுக்குழுவை தள்ளி வைக்குமாறு ஒருங்கிணைப்பாளர் எழுதிய கடிதம் பற்றி இந்த நிமிடம் வரை எனக்குத் தெரியவில்லை.

இந்த நிகழ்வினுடைய முன்னோட்டமாக மாசெக்கள் கூட்டம் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இறுதியாக பேசிய ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம், ‘கடந்த இரு ஆண்டுகளாக கொரோனாவால் கூடப்படவில்லை. உட்கட்சித் தேர்தல் முடிந்திருக்கிறது. அதன் பின் நடக்கும் பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட வேண்டாம்’ என்று கூறி அதன்படியே அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. 14 ஆம் தேதியே இதுபற்றி முடிவெடுத்து ஒருங்கிணைப்பாளரே அறிவிக்கிறார். அதன் பின் இரு நாட்களுக்கு முன்பாக தீர்மானக் குழுவில் அமர்ந்து அவரே தீர்மானங்கள் பற்றிய கருத்துகளை எடுத்துரைத்தார். அதற்கு பதிவு இருக்கிறது. ஆனால் இன்று பொதுக்குழுவை ஒத்தி வைக்க வேண்டும் என்று சொல்வது என்ன காரணம் என்று எங்களுக்குப் புரியவில்லை.
இங்கே அதிமுகவின் பெரும்பாலான தலைவர்கள் இருக்கிறோம். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து இந்த கட்சிக்காக போராடிய முன்னணித் தலைவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். இந்த பொதுக்குழுவுக்கு திருவிழாவைப் போல கொண்டாட ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் வருகிறார்கள். நாளை ஆட்சிக்கு வருவதற்காக அதிமுக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆனால் ஒரு சில சந்தர்ப்பவாதிகள் தங்கள் தேவையை தீர்த்துக் கொள்வதற்காக கழகத்துக்குக் களங்கம் விளைவிக்கிறார்கள். அவர்களுக்கு காலம் பதில் சொல்லும், பொதுக்குழுவுக்கு ஒருங்கிணைப்பாளரும் வருவார், இணை ஒருங்கிணைப்பாளரும் வருவார். பொதுக்குழு முடிவுகளை இருவரும் ஏற்றுக் கொள்வார்கள்” என்றார் கே.பி. முனுசாமி.

பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அழுத்தமாகச் சொல்கிறார். ஆனால் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் சார்பில் பொதுக்குழு நடக்கும் மண்டபத்தைப் பார்வையிட்ட கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பொதுக்குழு எழுச்சியாக நடைபெறும் என்று உறுதியாக கூறுகிறார்கள். இதற்கிடையில் பொதுக்குழுவுக்கு தடை கோரி சென்னை நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

ஒரே கட்சிக்குள் பொதுக்குழு நடத்தக் கூடாது என்றும், நடக்கும் என்று இரு கட்சிகளாக பன்னீரும், பழனிசாமியும் பிரிந்து கிடக்கிறார்கள். பொதுக்குழுவில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போக வாய்ப்புள்ளது என்று பன்னீர்செல்வமே எடப்பாடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த நிலையில் அதிமுக என்ற கட்சியைத் தாண்டி சுமார் 2500 பேர் கலந்துகொள்ளும் நிகழ்வின் சட்டம் ஒழுங்கு பற்றிய எச்சரிக்கைகளை காவல்துறையும், அரசுத் துறையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. பொதுக்குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு அது விசாரணைக்கு வந்தால் அரசாங்கத்திடமும், காவல்துறையிடமும் பொதுக்குழு நடத்த ஏதுவான சூழல் உள்ளதா என்று நீதிமன்றம் கேட்கும்.

அதாவது பொதுக்குழு நடப்பதா வேண்டாமா என்பது பற்றி திமுக அரசின் காவல்துறை இப்போது ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையில் குறிப்பிட்ட நிகழ்ச்சியை நடத்தலாமா வேண்டாமா என்று தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு வருவாய் துறையிடமும் இருக்கிறது.

பொதுக்குழு நடக்க இருக்கும் வானகரம் என்பது மதுரவாயல் தாலுகாவுக்குள் வரும் பகுதியாகும். மதுரவாயல் வட்டத்தில் மதுரவாயல், வானகரம், நொளம்பூர், போரூர், நெற்குன்றம், வளசரவாக்கம், ராமாவரம், காரம்பாக்கம் ஆகிய பகுதிகள் வருகின்றன. இப்பகுதிகளில் பொது நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு மதுரவாயல் வட்டாட்சியர் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த நிலையில் வானகரத்தில் நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2,500 பேர் கூட இருக்கும் நிலையில் அதுபற்றி மதுரவாயல் வட்டாட்சியர் ஆய்வு செய்துவருவதாக நிர்வாக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். அதேநேரம் பொதுக்குழு நடக்கும் பட்சத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமா என்பது குறித்து உளவுத்துறையினரும் கிரவுண்ட் நிலவரத்தை மேலிடத்துக்கு அனுப்பி வைத்து வருகிறார்கள். வருவாய் துறையினர், உளவுத்துறையினர் ஆகியோரின் ரிப்போர்ட்டுகள் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதற்கிடையே ஒ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் எம்.,எல்.ஏ. சில உயர் உளவுத்துறை அதிகாரிகளோடு நல்ல தொடர்பில் இருக்கிறார். அவர் பொதுக்குழு கூட்டம் கூடினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் உளவுத்துறையினருக்கு தெரிவித்திருக்கிறார்.

பன்னீர்-பழனிசாமி பஞ்சாயத்து இப்போது திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கையில் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை வெடிக்கும் என்பது தகுந்த காரணங்களால் உறுதி செய்யப்பட்டால்… பொதுக்குழு கூட்டத்தை அரசே தற்போதைக்கு தடை செய்து, வானகரம் மண்டபத்துக்குள் யாரும் நுழையாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அரசு வட்டாரங்களில்.

-**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share