திருச்செந்தூர் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுவதால் பொதுமக்கள் குளிக்க இன்று (மே 5) தடை விதிக்கப்பட்டுள்ளது.
காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் அதீத அலைக்கான “கள்ளக்கடல்” எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.
தமிழகத்தை பொறுத்தவரை தென் கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும், இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருச்செந்தூரில் இன்று காலை முதல் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கடல் அலையின் வேகம் அதிகமாக இருப்பதால், கடலில் யாரும் குளிக்கக் கூடாது என போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
அதிக சீற்றம் காரணமாக கடலில் குளிக்க தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதால், கோவிலுக்கு வந்த பக்தர்கள் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…