போர்க்கால நடவடிக்கை! மினி தொடர் – 16

Published On:

| By Balaji

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் -16

தமிழ்நாடு பார் கவுன்சில் நிர்வாகத்தில் நடந்த கேலிக் கூத்துகளை சுட்டிக் காட்டும் அதேநேரம் இப்போது போர்க்கால அடிப்படையில் நடக்கும் நிர்வாகச் சீரமைப்புப் பணிகளையும் பாராட்டியே ஆக வேண்டும் என்கிறார் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் பார் கவுன்சில் தலைவருமான ஆர்.கே. சந்திரமோகன்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நெருங்கிக் கொண்டிருக்கும் பார் கவுன்சில் தேர்தலில் யார் வாக்களிக்கலாம், யார் வாக்களிக்க இயலாது என்ற விதிமுறைகளைப் பற்றி விளக்கிய சந்திரமோகன்,

’’யாரெல்லாம் இப்போது சர்டிபிகேட் ஆஃப் பிராக்டிஸ் என்ற பார் கவுன்சிலின் விதிமுறைக்கு உட்பட்டு தங்கள் சான்றிதழ்களை சரிபார்ப்புக்கு அனுப்பியிருக்கிறார்களோ, அவர்கள் மட்டும்தான் ஓட்டு போட முடியும் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.

மேலும் புதிதாக வந்த வழக்கறிஞர்கள் அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தேர்வுகளை எழுத வில்லை என்றால், அவர்கள் வாக்களிக்க தகுதியற்றவர்கள் என்றொரு விதியும் பார் கவுன்சிலில் உள்ளது.இது எங்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய குறை. இருந்தாலும் உச்ச நீதிமன்றம் சொன்னபிறகு அதை மறுத்துப் பேசுகிற மன நிலையில் இப்போது இல்லை.

வழக்கறிஞர்கள் முதலில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்தத் தீர்ப்பில் உடன்பாடு இல்லையென்றால் அதற்குரிய சட்ட ரீதியான வழிகளை நாட வேண்டுமே தவிர, வேறு வழிகளில் எதிர்க்கக்கூடாது.

உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவை மறு ஆய்வு செய்யச் சொல்லி கேட்கலாம். எதார்த்தமாகப் பார்த்தால் அது தவறானக் கண்ணோட்டமாகத் தெரிகிறது. ஆனாலும் தீர்ப்பை 100 சதவிகிதம் நாங்கள் விமர்சனம் செய்ய மாட்டோம்.

அந்தத் தீர்ப்பின்படி இப்போது 4 ஆயிரம் வழக்கறிஞர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்காக நீதிமன்றம் மூலமாக ஏதாவது வழி தேடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்’’ என்றவர் அடுத்த விஷயத்துக்கு வந்தார்.

’’தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் விஜய நாராயணன் அவர்கள்தான் இன்று தமிழ்நாடு பார் கவுன்சிலின் தலைவராக செயல்பட்டு வருகிறார். அவர் தலைமையிலான (8 ஏ ) நிர்வாக கமிட்டியின் உறுப்பினர்களாக மூத்த நீதிபதிகளான சந்திரசேகரன், மற்றும் சிங்காரவேலன் ஆகியோர் செயல்படுகிறார்கள். அவர்கள் மூத்த நீதியரசர்கள், வழக்கறிஞர் தொழிலில் நீண்ட கால அனுபவமும், பக்தியும் கொண்டவர்கள்.

அவர்களது நேர்மையும் அனுபவமும் உழைப்பும் இந்த பார் கவுன்சில் தேர்தலை நல்ல வழியில் நடத்துவதற்கு பயன்படும் என்று எங்களுக்கெல்லாம் நம்பிக்கை இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

வழக்கறிஞர்கள் என்று தவறாகப் பதிவு செய்தவர்கள் யார், சர்டிபிகேட் ஆஃப் பிராக்டிஸ் என்ற விதிமுறைக்கு உட்பட்டு தங்களது கல்விச் சான்றிதழ்களைக் கொடுக்காதவர்கள் யார் என்பதையெல்லாம் ஆய்வு செய்து… கொடுத்தவர்களும் சரியாகக் கொடுத்திருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்து , ஒரு போர்க்கால அடிப்படையில் இந்த குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இது நல்ல முன்னுதாரணமாக இருக்கிறது. இதை நான் உண்மையாக வரவேற்கிறேன்.

Bar Council of India and Lawyers Mini Series 16

அதேநேரம் இன்னொரு கருத்தையும் இங்கே அழுத்தமாக வைக்க வேண்டியிருக்கிறது. இப்போது தமிழகத்தில் 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை வழக்கறிஞர்களாக இருக்கும் நிலையில்… அதில் 60 ஆயிரம் பேர் வரைதான் சர்டிபிகேட் ஆஃப் பிராக்டிஸ் என்ற விதிப்படி தங்கள் ஆவணங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அதைக் கொடுக்காத காரணத்தாலேயே மீதி இருப்பவர்கள் எல்லாம் போலி வழக்கறிஞர்கள் என்று சொல்லிவிட முடியாது.

என்ன ஒரு குறை என்றால் பல வழக்கறிஞர்கள் கல்விச் சான்றிதழ்களை, ஆவணங்களை எல்லாம் முறைப்படுத்தி பத்திரமாக வைக்க வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல் இருந்துவிடுவதுதான். பத்து வருடத்துக்கு ஒரு முறை அலுவலகத்தை மாற்றுவது, ஐந்து வருடத்துக்கு ஒரு முறை வீட்டை மாற்றுவது போன்ற நடவடிக்கைகள், மேலும் நான்கு வருடத்துக்கு ஒருமுறை பணிபுரியும் இடத்தையே மாற்றுவார்கள். அதாவது திருச்சியில் பணி செய்யும் வழக்கறிஞர்கள் சென்னைக்கு வருவார்கள், மதுரைக்கு செல்வார்கள்.

இப்படிப்பட்ட செயல்பாடுகளின் போது நிறைய வழக்கறிஞர்களுடைய ஆவணங்கள் காணாமல் போக நேரிடுகிறது. மேலும் புயல் வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளில் கூட பல வழக்கறிஞர்கள் தங்கள் ஆவணங்களை இழந்திருக்கிறார்கள்.

எனவே இதுபோன்று தங்கள் சான்றிதழ்களை இழந்த வழக்கறிஞர்களுக்கு மீண்டும் சான்றிதழ்களை புதுப்பித்துக் கொள்ளும் பணிகளை செய்வதிலும் அட்வகேட் ஜெனரல் விஜய நாராயணன் தலைமையிலான அந்த கமிட்டி சிறப்பாக செயல்படுகிறது. இதனால் தேர்தலுக்குள் இன்னொரு பத்து, இருபதாயிரம் வழக்கறிஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக ஆகப் போகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது’’ என்று தற்போதைய பார் கவுன்சில் நிர்வாகக் குழுவின் செயல்பாட்டுக்கு நற் சான்றிதழ் வழங்குகிறார் ஆர்.கே.சந்திரமோகன்.

பார் கவுன்சில் என்றாலே தேர்தல் மட்டும்தானா… அதையெல்லாம் தாண்டி சாதித்த நல்ல விஷயங்கள் பற்றி இன்னும் பேசுவோம்!

(விளக்கு ஒளிரும்)

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 1

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 2

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 3

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 4

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 5

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 6

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 7

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 8

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 9

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 10

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 11

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 12

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 13

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 14

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 15

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share