இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 10
சர்ட்டிஃபிகேட் ஆஃப் பிராக்டிஸ் என்றால் என்ன?
1976க்குப் பிறகு பதிவுபெற்ற அனைத்து வழக்கறிஞர்களும் தங்களது கல்விச் சான்றிதழ்களையும், வழக்கறிஞராகப் பணிபுரிந்தமைக்கான சான்றையும் (அதாவது கடந்த ஐந்தாண்டுகளில் தன் பெயரில் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வக்காலத்து ஆவணம்) பார் கவுன்சிலுக்குக் கொடுக்க வேண்டும். இதில் மூத்த வழக்கறிஞர்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டில் பதிவில் இருக்கும் வழக்கறிஞர்களுக்கும் விலக்கு உண்டு.
இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது எல்லா மாநில பார் கவுன்சில்களிலும் தேர்தல் மிக நெருக்கமாக இருந்தது. இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்ததன் மூலம் உடனடியாக தேர்தலை நடத்திடாமல் குறுக்கு வழியில் தங்கள் பதவியைத் தொடர பார் கவுன்சில் நிர்வாகிகள் தந்திரங்கள் செய்தார்கள் என்றே நான் கருதுகிறேன் என்கிறார் மூத்த வழக்கறிஞர் வேல்முருகன்.
**இந்த சர்ட்டிஃபிகேட் ஆஃப் பிராக்டிஸின் நோக்கம் என்ன?**
வழக்கறிஞராக பதிவு செய்தவர்களில் கணிசமானவர்கள் பிராக்டிஸ் செய்யாமல் இருக்கிறார்கள். அதாவது, வழக்கறிஞர் என்ற பதிவு பெற்றதோடு சரி, அவர்கள் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடாமல் இருப்பார்கள். நீதிமன்றங்களுக்குச் செல்ல மாட்டார்கள். ஆனால், வழக்கறிஞர்களுக்கான பல்வேறு நல நிதிகளை மட்டும் பெற்றுக் கொள்வார்கள்.
நம் நாட்டில் வழக்கறிஞர்களுக்கு என்று பல்வேறு நல நிதித் திட்டங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் பணியில் இருக்கும் வழக்கறிஞர் இறந்துவிட்டால் ஐந்தே கால் லட்ச ரூபாய் கொடுக்கிறார்கள். இதற்காக வழக்கறிஞர்கள் தங்கள் பங்களிப்பாக வக்காலத்துகளில் முப்பது ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நல நிதி என்பது 2015க்கு முன்பு வரை என்ரோல் செய்யப்பட்ட எல்லா வழக்கறிஞர்களுக்கும் கிடைத்துவந்தது. அதாவது வழக்கறிஞராக பதிவு செய்திருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு நீதிமன்றம் எந்தத் திசையில் இருக்கிறது என்பதே தெரியாது. காரணம், அவர்கள் நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசர்களாக இருப்பார்கள். நீதிமன்ற வாசனையே அறியாத இவர்களும் வழக்கறிஞர்களின் நலநிதித் திட்டங்களின் பலன்களை அடைந்து வந்தார்கள். நீதிமன்றப் படி ஏறாதவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் நலநிதியைப் பெற தகுதியற்றவர்கள். இதை ஒழுங்குபடுத்துவதற்காகத்தான் சர்ட்டிஃபிகேட் ஆஃப் பிராக்டிஸ் என்ற முறை கொண்டு வரப்பட்டது.
ஆக… வழக்கறிஞராகப் பதிவு பெற்றால் மட்டும் போதாது. நீதிமன்றத்தில் களமாடி வழக்கு நடத்தியிருக்க வேண்டும். வழக்கு நடத்தியிருந்தால்தான் அந்த வழக்கறிஞர் பெயரில் வக்காலத்துப் பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்தப் பதிவை சமர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் சர்ட்டிஃபிகேட் ஆஃப் பிராக்டிஸ்.
இது நீதிமன்றத்துக்கு வந்து உழைக்கும் வழக்கறிஞர்களின் பலன்களை, நீதிமன்றம் பக்கமே வராத பதிவு வழக்கறிஞர்கள் பறிப்பதைத் தடுக்கிறது.
மேலும், இந்த சர்ட்டிஃபிகேட் ஆஃப் பிராக்டிஸ் மூலம் இன்னொரு நன்மையும் நடக்கும். பதிவு என்ற பெயரில் போலி சான்றிதழ் கொடுத்தவர்களும் இதன்மூலம் அடையாளம் கண்டறியப்படுவார்கள்.
**இதை வைத்து எப்படி பார் கவுன்சில் தேர்தலைத் தள்ளிப் போடுகிறார்கள்?**
இந்த நியாயமான கேள்விக்கு மூத்த வழக்கறிஞர் வேல்முருகன் தெளிவாகப் பதில் சொல்கிறார்.
சர்ட்டிஃபிகேட் ஆஃப் பிராக்டிஸ் சட்டதிட்டத்தின்படி அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதத்துக்குள் மேற்குறிப்பிட்ட பதிவுச் சான்றிதழையும், நீதிமன்ற வக்காலத்து ஆவனங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். அந்த முதல் கெடுவான ஆறு மாதங்கள் முடிந்ததும் மீண்டும் ஆறு மாத காலம் நீட்டித்தனர். அப்புறம் இன்னொரு ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அதில் ஐம்பது ரூபாய் அபராதம் செலுத்தி ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். அதற்குப் பிறகு இன்னொரு ஆறு மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டது. அதில் மாதத்துக்கு நூறு ரூபாய் அபராதம்.
சர்ட்டிஃபிகேட் ஆஃப் பிராக்டிஸை முழுமைப்படுத்தினாலே மூன்று வருடங்கள் முடிந்துவிடும். ஆக, மூன்று வருடங்களுக்கு பார் கவுன்சில் தேர்தல் நடத்த முடியாது என்பது வெளிப்படையான விஷயம். இந்த நடைமுறை முடியாமல் தேர்தல் நடத்த முடியாது என்ற நிலைமை இப்போது. இந்த விவகாரம் இப்போது உச்ச நீதிமன்றத்திடம் இருக்கிறது.
இதனால்தான் பல்வேறு பார் கவுன்சில்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று இந்த வழக்கில் தங்களை இணைத்துக்கொண்டு, ‘சர்ட்டிஃபிகேட் ஆஃப் பிராக்டிஸ்’ முறையை வைத்துக்கொண்டு தேர்தலை நடத்த முடியாமல் செய்து வருகிறார்கள். வழக்கறிஞர்களின் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால், இதை அடிப்படையாக வைத்து ஏற்கெனவே பதவியில் இருப்பவர்கள் தொடர்ந்து பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டனர்.
இதை ஏற்றுக்கொண்டுதான் கடந்த 23-8-17 அன்று உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவிட்டது, ‘வரும் டிசம்பர் 31 -2017க்குள் பார் கவுன்சில் தேர்தல் நடைமுறைகளை முடிக்க வேண்டும்’ என்று!
இந்த உத்தரவிலும் சில தெளிவுகள் தேவையாக இருந்தன. ஏனென்றால் இந்தியா முழுவதும் சுமார் 15 லட்சம் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். இவர்களில் தங்கள் கல்விச் சான்றிதழ்களைச் சரிபார்ப்புக்காக கொடுத்தவர்கள் 6 லட்சத்து 45 ஆயிரம் பேர்தான். இவர்களைத் தவிர மிச்சம் இருப்பவர்கள் அத்தனை பேரையும் போலி வழக்கறிஞர்கள் என்று முத்திரை குத்திவிட முடியுமா? தமிழகத்தில் இதேபோல பதிவு பெற்ற வழக்கறிஞர்கள் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களில் சரிபார்ப்புக்காக விண்ணப்பித்தவர்கள் 55 ஆயிரம் பேர்.
இந்த நிலையில் அடுத்த குழப்பம் என்னவென்றால்… 2015இல் இருந்து 2017 வரை எந்த ஆவணமும் சரிபார்க்காத நிலையில் இவ்வளவு குறுகிய காலத்துக்குள் இவ்வளவு ஆவணங்களை எப்படி சரிபார்ப்பது?
இந்தக் குழப்பங்களுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒரு தீர்வு அளித்தது. அது என்ன?
(விளக்கு நாளை ஒளிரும்)
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 1
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 2
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 3
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 4
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 5
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 6
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 7
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 8
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 9