பார் கவுன்சில் தேர்தல்: பாதை தெரியுது பார்! மினி தொடர்- 4

Published On:

| By Balaji

பார் கவுன்சில் தேர்தலுக்காக நடந்த சட்டப்போராட்டங்களைப் பார்த்தாலே, இது பூ பாதை அல்ல, போராட்டப் பாதை என்று அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில்தான் ஜனவரி 24-ம் தேதி தமிழக பார் கவுன்சிலின் இடைக் காலக் குழு கூடி சில புதிய நிபந்தனைகளை நிறைவேற்றியது.

உச்ச நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்ததன் அடிப்படையில், 21-1-18 அகில இந்திய பார் கவுன்சில், தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டது. அதன்படி பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை வேட்பு மனுதாக்கல், அதன் பிறகு 23 ம் தேதி மனுக்கள் பரிசீலனை என்றும் அதன் பிறகு தேர்தல் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன்படி தேர்தல் நடத்தும் அலுவலராக ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலியை நியமித்தது பார் கவுன்சில்.

இந்நிலையில்தான் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி தமிழ்நாடு பார்கவுன்சிலின் இடைக்கால நிர்வாகக் குழு, பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு புதிய தகுதிகள் என்று சிலவற்றை நிபந்தனைகளாக விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அதாவது, “இரண்டு முறைக்கு மேல் தொடர்ந்து பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் மீண்டும் போட்டியிடக் கூடாது, அரசியல் கட்சிகளில் பொறுப்பில் இருப்பவர்களோ, அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்துபவர்களோ பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடக் கூடாது” உள்ளிட்ட ஏழு நிபந்தனைகளை வைத்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

மாநில பார் கவுன்சில் நிறைவேற்றும் எந்த முடிவும் அகில இந்திய பார் கவுன்சிலின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதற்காக இந்த தீர்மானம் டெல்லிக்கு அனுப்பப்பட்டது.

ஏற்கனவே, வழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தேர்தல் தள்ளிப்போடப்பட்டு இப்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.

பார் கவுன்சில் தேர்தல் நடைமுறைகள் தொடங்கும் நேரத்தில் இதுபோன்ற புதிய நிபந்தனைகள் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி, தேர்தலை மேலும் தள்ளிப் போட வழி வகுக்குமென்று கருதப்பட்டது. அதனால், இடைக்கால குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. ‘இந்த குழுவுக்கு தேர்தல் பற்றிய விதிமுறைகளை வகுக்க அதிகாரமில்லை’ என்று அந்த வழக்கில் சுட்டிக் காட்டப்பட்டது

அதில், “இந்திய பார் கவுன்சிலின் ஒப்புதல் பெற்றால்தான் தமிழ்நாடு பார் கவுன் சில் இடைக்கால குழுவின் நிபந்தனைகள் செல்லும்” என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார்.

இதற்கிடையில் தமிழக பார் கவுன்சிலின் இடைக்கால நிர்வாகக் குழு வகுத்த புதிய நிபந்தனைகளை தேர்தல் நேரம் என்பதால் இப்போதைக்கு ஏற்க முடியாது என்று அகில இந்திய பார் கவுன்சில் முடிவெடுத்தது. இந்திய பார் கவுன்சில் எடுத்த முடிவை எதிர்த்து சில வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றம் சென்றனர். இதை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம் அமர்வு, ‘தமிழக பார் கவுன்சிலின் இப்போதைய முடிவுகளை ஏற்க முடியாது என்ற அகில இந்திய பார் கவுன்சிலின் முடிவுக்கு ஸ்டே கொடுத்தது.

இதையடுத்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் நீதிபதி கிருபாகரன், தாரணி ஆகியோர் கொண்ட அமர்வு…பார் கவுன்சில் தேர்தலுக்கு மிகக் கடுமையான நிபந்தனைகள் விதித்தது. அதாவது வருமான வரித்துறை தனி குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்தார்கள்..

இவ்வாறு மூன்று வெவ்வேறு அமர்வுகள் பிறப்பித்த வெவ்வேறு ஆணைகளால் தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் அறிவிக்கப்பட்டபடி நடக்குமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் வழக்கறிஞர்கள். ஆனால் இதையடுத்து உச்ச நீதிமன்றம் சென்றதை அடுத்துதான் புதிய நிபந்தனைகள் எல்லாம் இந்தத் தேர்தலுக்குக் கிடையாது என்ற தெளிவு கிடைத்து, இப்போது பார் கவுன்சில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஜோராக நடந்துகொண்டிருக்கின்றன.

ஆனால்…. அதிலும் ஒரு திருப்பம்!

பார் கவுன்சிலில் போட்டியிடும் வேட்பாளர்கள் துண்டுப் பிரசுரங்கள் அடித்து விநியோகிக்கக் கூடாது. பிரசாரம் செய்யக் கூடாது, சமூக தளங்களில் ஓட்டு கேட்டு இடுகைகள் இடக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில்தான் மதுரையில் ஆரோக்கியமான ஒரு விஷயம் நடந்திருக்கிறது.

ஆம்…

பார்கவுன்சில் தேர்தல் பிரச்சாரங்கள் படுவேகமாக பல்வேறு வடிவங்களில் நடந்துவருகிறது. ஆனால், வேட்பாளர்கள் தங்களது நோக்கங்களையும் கருத்துக்களையும் வழக்கறிஞர்களோடு பகிர்ந்து கொள்ளவோ, அல்லது போட்டியிடுகிற வேட்பாளர்களோடு வழக்கறிஞர்கள் ஆரோக்கியமான விவாதங்கள் நடத்தவோ வாய்புகள் இல்லாத சூழல் நிலவி வருகிறது.

இதனை சரிசெய்யும் முயற்சியாக, போட்டியிடுகிற அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அமரவைத்து, அவர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை வழக்கறிஞர்களோடு பகிர்ந்து கொள்ளவும், அதன் பின்னர் வழக்கறிஞர்கள் அவர்களிடம் நேருக்குநேராக ஆரோக்கியமான விவாதங்களை நடத்தவும், மதுரையிலுள்ள லாஸ்” சட்ட செயல்பாட்டு மையம் திட்டமிட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சட்டம் சார்ந்த கலந்துரையாடல்களிலும், ஆரோக்கியமான பல்வேறு சட்டப்பணிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் “லாஸ்” அமைப்பு, இன்று (14-03-2018) மாலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு அருகிலுள்ள தனது மையத்தில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்துகிறது.

மதுரையிலிருந்து போட்டியிடும் 25-க்கும் மேற்பட்ட பார்கவுன்சில் வேட்பாளர்கள் ஒன்றாகப் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில், ‘நான் ஏன் போட்டியிடுகிறேன். என் வாக்குறுதிகள் என்ன?’ என்று அவர்கள் பேச வேண்டும்.

Bar Council Election Mini Series 4

இந்த நிகழ்ச்சி பார் கவுன்சில் தேர்தல் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அதைக் கருத்தில் கொண்ட தேர்தல் அதிகாரிகளான மரியாதைக்குரிய நீதிபதி அக்பர் அலி மற்றும் நீதிபதி மதிவாணன் ஆகியோர், இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு சுட்டிக்காட்டி,

அத்தகைய விதிகளின் நிபந்தனைகளை மனதில் நிறுத்தி அந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்துமாறு நோட்டீஸ் மூலம் உத்தரவிட்டு, நிகழ்ச்சிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வு பற்றி விரிவாகப் பார்ப்போம்

(பயணம் தொடரும்)

எழுத்தாக்கம்: ஆரா

[பாதைதெரியுது பார் மினிதொடர்-1]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-2]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-3]

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share