பேனர் ஊழல்: எடப்பாடி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்!

Published On:

| By Kalai

நம்ம ஊரு சூப்பர் பேனரில் மெகா ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் புகார் அளித்த நிலையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கம் அளித்துள்ளார்.  

சென்னையில் இன்று(நவம்பர் 25) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன், “ஊராட்சிமன்ற தலைவர்கள் தான் நம்ம ஊரு சூப்பர் பேனர்க்கான நிதியை வழங்கியுள்ளனர்.

ADVERTISEMENT

அதற்கான டிசைன் மட்டுமே அரசு வழங்கியது. மெகா ஊழல் என்று அடிப்படை ஆதாரம் இல்லாமல் எதிர்கட்சித் தலைவர் கூறுகிறார்.

உள்ளாட்சிகளின் அதிகாரத்தை பிடுங்கியது இந்த அரசு என்று எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார். அது யாருக்கு பொருந்தும் என்பது அனைவருக்கும் தெரியும்.

ADVERTISEMENT

உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்தாததால் ஜனநாயகப் படுகொலையை செய்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுதான்.

முறையாக தேர்தலை நடத்தாததால் ஒன்றிய அரசு தரவேண்டிய நிதிகளை பெறமுடியாமல் போனது.

ADVERTISEMENT

உள்ளாட்சியில் முடிக்கப்பட்ட பணிகளைப் பற்றி விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லுகிறார். அத்தகைய விளம்பரங்கள் அதிமுக ஆட்சியில்தான் செய்யப்பட்டது.

தற்போது செய்யப்படும் விளம்பரம் என்பது மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த கிராமசபை கூட்டத்திற்காக செய்யப்பட்டது.

அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் பேனரில்கூட ஊழல் செய்திருக்கிறார்கள். ரூ. 2800 மதிப்பிலான பேனர்களை அனைத்து ஊராட்சிகளிலும் நிறுவினார்கள்.

Banner scandal Ministers response to Edappadis accusation

அதற்காக போடப்பட்ட தொகை ரூ. 28,000. எதை செய்தாலும் 10 மடங்கு உயர்த்திதான் செய்திருக்கிறார்கள்.

அதைப்போல ரூ. 500 மதிப்புள்ள 20 வாட்ஸ் எல்ஈடி பல்பை ரூ. 5000 என பில் போட்டு எடுத்தவர்கள் பழனிச்சாமி தரப்பினர்.

ரூ. 4500 மதிப்புள்ள 90 வாட்ஸ் பல்புக்கு ரூ. 15000 கணக்கு காட்டியவர்கள். ஆனால் தற்போது போலியான குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்கள்.

பேனர் ஒன்றுக்கு ரூ. 611 மட்டுமே செலவு செய்யப்பட்ட நிலையில் ரூ. 7906 என்று சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமமாகும்.

ஊழல் செய்வதையே முழு நேர காரியமாக செய்து கொண்டிருந்த அவர்கள், எதற்கெடுத்தாலும் மெகா ஊழல் என்று சொல்வது எப்படி நியாயமாகும். அதில் உண்மைத்தன்மை இல்லை.

எதிர்கட்சித் தலைவருக்கு பேனர் விவகாரத்தில் தவறான தகவலை வழங்கியவர்கள் யார் என்பதை உணர்ந்து எடப்பாடி பழனிசாமி நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் கூட இருந்தே குழி பறிப்பவர்களாக இருப்பர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள்,

தங்கள் உட்கட்சி மோதலை மறைக்கப் பார்க்கிறவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டை சொல்லி வருகிறார்கள்” என்று அமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார்.

கலை.ரா

ஆன்லைன் ரம்மி – தினம் தினம் 10 கோடி: கவர்னர் தள்ளும் மர்மம்!

“மனசாட்சிப்படி உண்மையை சொல்லுங்கள்”- சுவாதியிடம் நீதிபதிகள் சரமாரிக் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share