வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூல்: நீதிபதிகள் வேதனை!

Published On:

| By Balaji

வங்கிக் கடன் தொகை வசூலிப்பதைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்ததை திரும்பப்பெறக் கோரிய வழக்கில், சிறு கடன்கள் வாங்கிய ஏழை மக்களிடம் வட்டிக்கு வட்டி வசூல் செய்யப்படுவது நியாயமற்றது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருச்சி சின்னக்கடை வீதியில் உள்ள தனியார் வங்கியில் நீண்ட கால கடனாக 50 லட்சம் ரூபாய் மற்றும் வீட்டுக் கடனாக 15 லட்சம் ரூபாய் விவசாய நிலங்களை அடமானம் வைத்து கடன் பெற்றேன்.

இதில் வீட்டுக் கடனுக்காக 18 லட்சம் ரூபாயும் நீண்டகால கடனுக்கான தொகையில் 25 லட்சம் ரூபாயும் செலுத்தப்பட்டது.

இதனிடையே தொழில் நிலைமை சரியில்லாத காரணத்தால் வங்கியில் சரிவரப் பணம் கட்ட முடியவில்லை.  எனது விவசாய நிலத்தை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளைத் தனியார் வங்கி மேற்கொண்டது. எனது நிலத்தை விற்க கூடாது என்று நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 75 லட்சம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

எனவே 75 லட்சம் ரூபாய்க்கான வரைவு காசோலையை வங்கி மேலாளரிடம் கொடுப்பதற்காகக் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி வங்கிக்குச் சென்றபோது  மேலாளர் அதனை வாங்க மறுத்து என் மீது வீசி எறிந்தார். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் எனது நிலத்தைத் தனியாரிடம் ஒப்படைத்து பணம் வசூலிப்பதற்காக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. எனவே,  கடன் தொகை வசூல் செய்யும் பணியைத் தனியார் நிறுவனத்திடம்  ஒப்படைத்ததை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கிகள் பணம் வசூலிக்க 3 விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், கடன் பெற்றவர்களுக்கு முதலில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்,அவர்கள்  அளிக்கும் பதிலை வைத்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும், அதன் பின்பே நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

மேலும் சிறு கடன்கள் பெற்றுக் கட்ட முடியாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிப்பது என்பது நியாயமற்றது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், எந்த விதிகளின் அடிப்படையில் வங்கிகள் கடன் தொகை வசூலிப்பதைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கின்றன என்றும் கேள்வி எழுப்பினர்.

தனியார் நிறுவனங்கள் குண்டர்களை வைத்து கடன் தொகையை வசூலிக்கின்றன. இப்படி வசூல் செய்வதற்கு வங்கிகள் கடன் வழங்காமல் இருக்கலாம்.1000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் பெற்றவர்கள் எல்லாம் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்கின்றனர். ஆனால்  சிறு கடன்கள் வாங்கிய ஏழைகள் பணத்தை வசூல் செய்கிறோம் என்ற பெயரில் துன்புறுத்தப்படுகின்றனர்.

இந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் வரைவு காசோலையை தூக்கி எறிந்த சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share