வங்கி ஸ்டிரைக்: ராகுல் காந்தி ஆதரவு!

Published On:

| By Balaji

இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. நாடு முழுவதும் 9 லட்சம் வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால், நாடு முழுவதும் 85,000 வங்கி கிளைகளும், தமிழகத்தில் 16,000 வங்கி கிளைகளும் மூடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

போராட்டம் காரணமாக நாடு முழுவதும் 16,500 கோடி மதிப்பிலான 2 கோடி காசோலை பரிவர்த்தனைகள் தேக்கம் அடைந்துள்ளன. பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், காசோலை பரிமாற்றம் உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறவில்லை.

ஏற்கனவே சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஏடிஎம் மையங்களில் பணம் குறைவாக இருந்தது. நேற்றும் வங்கி பணிகள் நடைபெறாததால் பல ஏடிஎம் மையங்களில் பணம் இல்லை. இதனால் மக்கள் பணம் எடுக்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், வங்கி செயலிகளும் இயங்காததால் பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

ADVERTISEMENT

மத்திய அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் போன்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்கு, திமுக தலைவர் ஸ்டாலினும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் ஆதரவு அளித்துள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் டுவிட்டரில், “அரசுத்துறை வங்கிகளை மோடிக்கு ஆதரவான முதலாளிகளுக்கு மத்திய அரசு விற்பனை செய்து வருகிறது. பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்பதன் மூலம் இந்திய நிதி பாதுகாப்பை சீர்குலைப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்திய அரசாங்கம் லாபத்தை தனியார் மயமாக்குகிறது. நஷ்டத்தை தேசியமயமாக்குகிறது, வேலை நிறுத்தம் செய்யும் வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

**வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share