ஆசிய கோப்பை தொடரில் வங்காள தேச அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பை ஒருநாள் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தியா ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுவிட்ட நிலையில், நேற்று (செப்டம்பர் 15) சூப்பர்4 சுற்றின் கடைசி போட்டியில் வங்காளதேசத்துடன் மோதியது.
சீனியர் வீரர்களுக்கு ஓய்வு!
வெறும் சம்பிரதாயத்துக்காகவே நடந்த இந்த போட்டி காரணமாக இந்திய அணியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது.
அவர்களுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷமி, பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இலங்கை கொழும்பு பிரமேதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அணியை மீட்ட கேப்டன்!
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணியின் தொடக்கவீரர்களின் விக்கெட்டுகளை முதல் 5 ஓவர்களிலேயே இந்திய அணியின் ஷர்துல் மற்றும் ஷமி கூட்டணி கைப்பற்றியது.
எனினும் அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷகிப் அல்-ஹசான் (80), தோவ்ஹித் ஹிரிடோய் (54) ரன்களையும், நசும் அகமது (44) ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளுக்கு 265 ரன்களை குவித்தது வங்காளதேச அணி.
இந்திய அணி தரப்பில் ஷர்துல் 3, முகமது ஷமி 2, பிரசித் கிருஷ்ணா, அக்சர் பட்டேல் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
சதம் கண்ட சுப்மன் கில்
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா(0) மற்றும் திலக் வர்மா(5) அகியோர் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
அவர்களை தொடர்ந்து களமிறங்கிய ராகுல்(19) இஷான் கிஷன்(5), சூர்யகுமார் யாதவ்(27) மற்றும் ஜடேஜா (7) ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
எனினும் மறுமுனையில் நங்கூரமாய் நிலைத்து நின்று ஆடிய சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார். அவரும், அக்சர் பட்டேலும் களத்தில் இருந்த நிலையில் ஆட்டம் இந்தியாவின் வெற்றி நோக்கி பயணித்தது.
கடைசி கட்ட சொதப்பல்!
ஆனால் மெகதி ஹசன் பந்துவீச்சில் சிறப்பாக ஆடி வந்த கில் (121) ஆட்டமிழந்தார். அவரையடுத்து அக்சர் படேல் ஆட்டத்தை முடித்து கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 49ஆவது ஓவரில் ஒரு பவுண்டரியை அடித்த அக்சர் அடுத்த பந்தில் தூக்கியடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட இந்திய அணிக்கு கைவசம் 1 விக்கெட் மட்டுமே இருந்தது.
களத்தில் முகமது ஷமி மற்றும் பிரஷித் கிருஷ்ணா இருந்தனர். ஆனால் அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. ஐந்தாவது பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் அடித்துவிட்டு இரண்டாவது ரன்னுக்கு ஓடப் பார்த்த ஷமி ரன்-அவுட்டாக இந்தியா ஆல்-அவுட்டானது.
இதன்மூலம் இந்தியாவை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் வங்காள தேச அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
மேலும் 2012ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவை ஒருநாள் தொடரில் தோற்கடிக்க முடியாமல் தவித்து வந்த வங்காள தேச அணி சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வென்றுள்ளது.
பேட்டிங்கில் 80 ரன்கள் குவித்ததுடன், பந்துவீச்சிலும் 2 ஓவர்களை மெய்டன் செய்து ஒரு விக்கெட் கைப்பற்றிய கேப்டன் ஷகிப் அல்-ஹசன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த தோல்வி இந்தியா அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
இரவோடு இரவாக சீமான் மீதான புகார் வாபஸ்: விஜயலட்சுமி விளக்கம்!