பயிற்சியின் போது இடது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக உலக கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து பிரான்ஸ் வீரர் கரீம் பென்சிமா விலகியுள்ளார்.
22-வது பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று (நவம்பர் 20) துவங்குகிறது.
அல் பைக் மைதானத்தில் இன்று நடைபெறக்கூடிய முதல் போட்டியில் கத்தார் – ஈக்வடார் அணிகள் மோதுகின்றன.

இந்தநிலையில், நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா பயிற்சியின் போது தனது இடது தொடையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக போட்டியிலிருந்து விலகக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
உலக கோப்பை போட்டியிலிருந்து கரீம் பென்சிமா வெளியேறியது குறித்து பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பு கூறும்போது, “கத்தாரில் உள்ள தோகா மைதானத்தில் கரீம் பென்சிமா நேற்று பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது அவரது இடது தொடையில் காயம் ஏற்பட்டது. இதனால் தோஹாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குணமடைய மூன்று வாரங்கள் தேவைப்படும்.
கரீம் உலக கோப்பை போட்டியில் விளையாட முடியாதது குறித்து நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய வாரங்களில் பென்சிமா அதிகமாக போட்டிகளில் விளையாடவில்லை. நேற்று தான் அவர் முழுமையாக பயிற்சியில் ஈடுபட்டார். 2014-ஆம் ஆண்டு உலக கோப்பையில் பிரான்ஸ் அணிக்காக, அதிக கோல் அடித்தவர் பென்சிமா.
2018-ஆம் ஆண்டு அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்ட பென்சிமா, ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் பிரான்ஸ் அணியில் அதிக கோல்கள் அடித்தார்.
குரூப் டி பிரிவில் உள்ள பிரான்ஸ் அணி நவம்பர் 23-ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. கரீம் பென்சிமா பிரான்ஸ் அணியில் இல்லாதது பெரும் பின்னடவாக அமைந்துள்ளது.
செல்வம்