என்.டி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (ஏப்ரல் 28) விஜயவாடா வந்த நடிகர் ரஜினிகாந்தை, பாலைய்யா வரவேற்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஆந்திராவின் பழம்பெரும் நடிகரும், முன்னாள் முதல்வருமான நந்தமுரி தாரக ராமராவின்(என்டிஆர்) நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.
அதனை முன்னிட்டு என்டிஆரின் 100வது ஆண்டு விழா இன்று மாலை விஜயவாடாவில் பிரமாண்டமாக நடத்தப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ரசிகர்களால் பாலய்யா என்று அழைக்கப்படும் தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும், என்.டி.ஆரின் மகனுமான நந்தமுரி பாலகிருஷ்ணா தலைமையேற்று நடத்துகிறார்.
மேலும் இந்த விழாவில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் என்.சந்திரபாபு நாயுடு மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை விஜயவாடா விமான நிலையத்திற்கு வந்தார். அவரைக் கண்ட பாலையா, பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றார்.

அங்கிருந்து பாலய்யாவுடன் பேசியபடியே ஸ்டைலாக வெளியே வந்த ரஜினிகாந்த், அங்கு நின்ற தனது ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி புறப்பட்டு சென்றார்.
முன்னதாக ஏப்ரல் 23 அன்று, தனது தந்தையின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு விஜயவாடா மக்களுக்கும், தனது ரசிகர்களுக்கும் நடிகர் பாலய்யா அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
