விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வழக்கறிஞருக்கும், மத்திய ரிசர்வ் போலீசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று (ஜூலை 17) காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் மத்திய ரிசர்வ் போலீஸ் துணையோடு சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் சண்முகபுரம் காலனியில் அமலாக்கத் துறை சோதனை நடந்து வரும் நிலையில் அங்கு என்ன நடக்கிறது என்று அமைச்சர் வீட்டுக்கு வெளியில் குவிந்திருக்கும் திமுக நிர்வாகிகளிடம் பேசினோம்.
“திமுக முன்னாள் எம்.பியும், வழக்கறிஞருமான ஆதிசங்கர், அமைச்சர் பொன்முடி வீட்டில் காலை 8 மணி முதல் அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்துகிறார்கள் என்ற தகவல் கேட்டு நேரடியாக பார்க்கப் புறப்பட்டு வந்தார்.
அப்போது பொன்முடி வீடு அமைந்திருக்கும் வீதியில் 50மீ தூரத்திலேயே அமலாக்கத் துறையினரும், ஆயுதப்படை போலீசாரும் ஆதிசங்கரை தடுத்து நிறுத்தினர்.
“பொன்முடி வழக்கறிஞர் நான் தான், அவரது வழக்குகளுக்கு நான் தான் ஆஜராகி வருகிறேன். என்னை எப்படித் தடுக்க முடியும்” என்று வாக்குவாதம் செய்தார் ஆதிசங்கர்.

அதன்பிறகு பொன்முடி வீட்டின் அருகே செல்ல ஆதிசங்கரை அனுமதித்தனர்.
ஆனால் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் தனது காரிலே சென்று பொன்முடி வீட்டருகே இறங்காமல் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டுத் திரும்பிவிட்டார்.
முன்னதாக அமைச்சர் வீட்டுக்குள் சோதனை செய்துகொண்டிருந்த அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் திடீரென வெளியில் வந்து, தாங்கள் வந்த காரை திறந்து அதிலிருந்து முந்திரி பாக்கெட்டுகளை எடுத்து உள்ளே சென்றார்.
அதைத்தொடர்ந்து வந்த மூன்று அதிகாரிகள் இரண்டு பேக்குகளை எடுத்துக்கொண்டு பொன்முடி வீட்டுக்குள் நுழைந்தனர்.
அப்போது வெளியில் குவிந்திருந்த திமுகவினர், ‘என்ன எடுத்து செல்கிறீர்கள் காட்டுங்கள்’ என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
எனினும் அதிகாரிகள் எதுவும் சொல்லாமல் உள்ளே சென்றுவிட்டனர். இதை அறிந்த கட்சி பிரமுகர் ஒருவர் அமைச்சர், அமைச்சர் மனைவி, மகன் மூவர் செல்போனுக்கும் தொடர்பு கொண்டார். ஆனால் மூவர் போனும் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது” என்கிறார்கள் திமுக பிரமுகர்கள்.
தொடர்ந்து விழுப்புரத்தில் சோதனை நடந்து வருகிறது.
பிரியா
