பிரபல பதிப்பாளரும், பாஜக ஆதரவாளருமான பத்ரி சேஷாத்ரி தனது அவதூறு பேச்சுக்காக இன்று (ஜூலை 29) காலை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் கலவரத்தில் சிக்கி இதுவரை சுமார் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே மே 4ஆம் தேதி இரு குக்கி பழங்குடியின பெண்கள் மெய்தி இளைஞர்கள் பலரால் நிர்வாணமாக்கப்பட்டு சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள்.
இதுதொடர்பான வீடியோ 80 நாட்களுக்கு பிறகு கடந்த 20ஆம் தேதி வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து “மணிப்பூர் கலவரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு சிறிது கால அவகாசம் தருவோம். அப்போதும் நடவடிக்கை எடுக்கத் தவறினால் உச்சநீதிமன்றம் இவ்விவகாரத்தைக் கையில் எடுக்க நேரிடும். மணிப்பூர் கலவரத்தில் 2 பெண்கள் ஆடைகளை களைந்து இழுத்துச் செல்லப்படும் வீடியோக்கள் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் நடந்த இந்த கொடூரம் ஏற்றுக்கொள்ள முடியாது” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடும் கண்டனத்தை தெரிவித்து மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பிரபல பதிப்பாளரும், பாஜக ஆதரவாளருமான பத்ரி சேஷாத்ரி, மணிப்பூர் வீடியோ குறித்து பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு எதிராக பேசினார்.
அவர், ”மணிப்பூரில் கொலை நடக்கத்தான் செய்யும். தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம்” என்று பேசியிருந்தார்.
இதனையடுத்து சந்திர சூட் குறித்து அவதூறாகப் பேசிய பத்ரி சேஷாத்ரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் பெரம்பலூர் மாவட்ட குன்னம் காவல்துறையில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில், பத்ரியை இன்று காலை சென்னையில் வைத்து பெரம்பலூர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
காக்கா- கழுகு கதை… லேட்டா வந்து காப்பி கேட்ட நெல்சன்: ரஜினியின் முழு பேச்சு!