�
புற்றுநோய் தனது ஆசான் என்றும் அது தன் வாழ்வின் மதிப்பைக் கற்றுத் தந்ததாகவும் நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.
பம்பாய், இந்தியன், பாபா, முதல்வன் எனப் பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் மனிஷா கொய்ராலா. நேபாளத்தைச் சேர்ந்த இவர் 1989ஆம் ஆண்டு முதல் திரையுலகில் வலம் வருகிறார். நேபாளம், இந்தியத் திரையுலகில் பல மொழிகளில் நடித்துவந்த மனிஷா, கர்ப்பப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அமெரிக்கா சென்று தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்தார். தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் குறித்தும் தன்னம்பிக்கையுடன் தான் மீண்டு வந்தது குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஞாயிறு அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “புற்றுநோய் என்னுடைய ஆசான். என் வாழ்வின் மதிப்பை எனக்குக் கற்றுக்கொடுத்தது அதுவே. புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தபின் நான் என் குடும்பத்தை அதிகமாக நேசிக்கத் தொடங்கியிருக்கிறேன். முன்பைவிட இப்போது அதிகளவில் உடல்நலத்தில் அக்கறை செலுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
புற்றுநோய் தன்னை தாக்கியது, அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டது, அங்குப் பெற்ற அனுபவங்கள், அதில் இருந்து மீண்டு வந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கியது ஆகியவை பற்றி ‘ஹீல்டு’ என்ற புத்தகத்தை நீலம் குமாருடன் இணைந்து மனிஷா எழுதியுள்ளார். புற்றுநோய் தனக்கு எவ்வாறு புதிய வாழ்க்கையைக் கொடுத்தது என்பதை அந்தப் புத்தகத்தில் விளக்கியுள்ளார்.�,