திமுக: தொடங்கும் உட்கட்சித் தேர்தல்!

Published On:

| By Balaji

பிப்ரவரி 21ஆம் தேதி முதல் திமுகவில் உட்கட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1949 ஆம் ஆண்டு கட்சி தொடங்கியது முதல் இதுவரை திமுகவில் 14 முறை உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக 2014ஆம் ஆண்டு உட்கட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 2019ஆம் ஆண்டுடன் நிறைவடைந்தது. அதன்பிறகு மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் பலரும் பொறுப்பாளர்கள் என்ற பெயரிலேயே செயல்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் திமுக தலைமைக் கழகம் இன்று (பிப்ரவரி 3) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுகவின் 15-வது உட்கட்சிப் பொதுத்தேர்தல் 2020 பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது.திமுக சட்டதிட்டங்களின்படி, பல கட்டங்களாக திமுக அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெறும். முதல் கட்டமாக கிளைக் கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பேரூர்க் கழகம் மற்றும் மாநகர வட்டக் கழகத் தேர்தல்கள், அதன் தொடர்ச்சியாக, ஒன்றிய, நகர, மாநகரப் பகுதிக் கழகத் தேர்தல்களும், பின்னர், மாநகரக் கழகத் தேர்தல்களும் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், “இவற்றைத் தொடர்ந்து, மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமைப் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெற்ற பின்னர், புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் திமுக தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்துத் தேர்தல்களையும் நடத்தி முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share