கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் தயாரியுங்கள்!) திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. போதிய உள்கட்டமைப்பு வசதியின்மை, சட்டதிட்டங்கள் போன்ற காரணங்களால் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான முதலீடுகள் வேறு நாடுகளை நோக்கிச் செல்வதைத் தடுத்து, புதிய தொழில்களைக் கொண்டுவந்து, பொருளாதாரத்தை வளர்த்து, வேலை வாய்ப்புகளைப் பெருக்கி, வறுமையை ஒழிப்பது இத் திட்டத்தின் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், அரசு பெருமிதம்கொள்ளும் அளவுக்கு இந்தத் திட்டத்தின் செயல்பாடு உள்ளதா? என்றால் இல்லை. மேக் இன் இந்தியா-திட்டம்மூலம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்த்து, பல லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான முதல்கட்ட ஒப்பந்தங்கள் போடப்பட்டன. எப்போதும்போல், அறிவிப்புக்கும் நடைமுறைக்கும் இடையே இவை, நீண்ட தொலைவைக் கடந்து வரவேண்டி இருக்கிறது. மேக் இன் இந்தியா திட்ட அறிவிப்புக்குப் பின்னரும், அதற்கு முந்தைய 2014ம் ஆண்டு முதல் 2014 வரையிலான தொழில்துறை செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இது, மேக் இன் இந்தியாவால் பெரிய அளவில் தொழிற்துறையில் புரட்சி ஏதும் நடந்துவிடவில்லை என்பதை ஆய்வு காட்டுகிறது.
2012-14 ஆண்டுகளில் சராசரியாக 2330 தொழில் முதலீட்டுத் திட்டங்கள் கையெழுத்தாயின. ஆனால், 2015ம் ஆண்டு வெறும் 1909 முதலீட்டுத் திட்டங்களே கையெழுத்தாயின. இதில் செயல்பாட்டுக்கு வந்தவை 439 மட்டுமே. இதன் முதலீட்டு மதிப்பு ரூ. 77 ஆயிரத்து 972 கோடி.
2012-14ம் ஆண்டுகளில் 465 தொழிற்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. இவற்றின் மொத்த முதலீட்டு மதிப்பு ரூ. 79 ஆயிரத்து 800 கோடியாகும்.
2015ம் ஆண்டில் அதிக ஒப்பந்தங்கள் கையெழுத்தான மாநிலங்களில், 338 திட்டங்களுடன் மகாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. இதற்கடுத்த இடங்களில் குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதில் தமிழ்நாடு, 104 திட்டங்களுடன் 7வது இடத்தில் உள்ளது.
திட்டங்கள் அதிக அளவில் செயல்பாட்டுக்கு வந்த மாநிலங்களில் குஜராத், 80 திட்டங்களுடன் முன்னிலையில் உள்ளது. அதற்கடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 13ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை ‘மேக் இன் இந்தியா’ வாரம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இதில் பங்கேற்றன. இந்த நிகழ்ச்சி மூலம் ரூ. 15.2 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளன. இதில் நிகழ்ச்சியை நடத்திய மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மட்டும் ரூ. 8 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழில் திட்டங்கள் பல காகித நடைமுறைகளைக் கடந்து எப்போது, செயல்பாட்டுக்கு வரும் என்பது கானல்நீராக இருக்கிறது. ஆனால், விவசாய நாடு என்று பெருமைப்பட்ட இந்தியாவை, தொழில் வளர்ச்சி எங்கு இட்டுச் செல்லும்?
ப்ரியா அலங்கார்�,”