ADVERTISEMENT

சக்ஷம் 2022: எண்ணெய் சிக்கன பயன்பாடு குறித்த விழிப்புணர்வு

Published On:

| By admin

எண்ணெய் சிக்கன பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நாடு முழுவதும் வருகிற 22ஆம் தேதி வரை, “பசுமை மற்றும் தூய்மை ஆற்றல் வாயிலாக இந்திய விடுதலையின் அமுதப் பெருவிழா” என்னும் கருப்பொருளில் மேற்கொள்ளப்பட உள்ளது. சக்ஷம் 2022 என்ற எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சிக்கனம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.

இதேபோல சக்ஷம் 2022 பிரசார வாகனத்தையும் அவர் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்த விழிப்புணர்வு வாகனம், எரிபொருள் சிக்கன பயன்பாடு பற்றிய செய்திகளுடன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பயணம் செய்யும்.

ADVERTISEMENT

சக்ஷம் கருப்பொருளினை மையமாக கொண்டு பள்ளி மாணவ-மாணவிகள் தீட்டிய ஓவியங்கள் அடங்கிய கண்காட்சியையும் கவர்னர் தொடங்கி வைத்தார். கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் அங்கு நடத்தப்பட்டன.

பின்னர் நிகழ்ச்சியில் ஆர்.என்.ரவி பேசுகையில், “நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு நாம் ஆரோக்கிய சுற்றுச்சூழலையும், சீரான எதிர்காலத்தையும் தர வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்.” என்று கூறினார்.

ADVERTISEMENT

மேலும், “அனைவரும் இந்த எரிபொருள் சிக்கன நோக்கம் நிறைவேற தங்களுடைய பங்களிப்பை நல்கவேண்டும். சக்ஷம் என்பது நம் வாழ்வியல் வழிமுறையாகி நம் பண்பாட்டில் கலந்து இருத்தல் வேண்டும். அப்போது தான் இந்த உலகம் மகிழ்ச்சியாகவும், பசுமையாகவும் திகழும்” என்றார்.

நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குனரும், தென் மண்டல எண்ணெய் துறையின் தமிழ்நாடு-புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளருமான பி.ஜெயதேவன், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் தென் மண்டல தலைவர் புஷ்ப் குமார் நாயர், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் தென் மண்டல தலைவர் சஞ்சய் மாத்தூர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share