இந்தியா முழுவதும் 15,000 பள்ளிகள், 500 கல்லூரிகளில் ஏவிஜிசி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் 2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
பின்னர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர், “நாட்டில் வரைகலை, ஒளிக் காட்சிகள், விளையாட்டு சித்திரக்கலை ஆகியவற்றை உள்ளடக்கிய ஏவிஜிசி துறையில் 2030-ம் ஆண்டிற்குள் 20 லட்சம் வல்லுநர்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே நாட்டின் படைப்பாற்றல் பொருளாதாரத்தை (ஆரஞ்சுப் பொருளாதாரம்) மேலும் மேம்படுத்தும் வகையில், 15,000 உயர்நிலைப் பள்ளிகளிலும், 500 கல்லூரிகளிலும் ஏவிஜிசி உள்ளடக்க உருவாக்க ஆய்வகங்கள் அமைக்கப்படும் . இதற்காக மும்பையில் உள்ள இந்திய படைப்பாற்றல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு ஆதரவளிக்கப்படும் .
‘பாரத்-விஸ்தார்’ என்ற பெயரில் விவசாய வளங்கள் தொடர்பான ஒருங்கிணைந்த பன்மொழி தளம் ஒன்று செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும்.
இது வேளாண் நடைமுறைகள் குறித்த, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் தொகுப்பை ஒருங்கிணைக்கும்.
இது விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்தி, விவசாயிகளுக்குத் தனித்துவமான ஆலோசனைகளை வழங்கும். இதன் மூலம் விவசாயிகள் குறித்த நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்க முடியும்” என்று கூறினார்.
