அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியின் 6 சுற்றுகள் முடிவில் 15 காளைகளை அடக்கி கார்த்தி முதல் இடத்தில் உள்ளார்.
தை திருநாளின் முதல் நாளான இன்று காலை 7 மணிக்கு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது.
அமைச்சர் பி.மூர்த்தி தொடக்கி வைத்த இந்த போட்டியானது ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாய்ந்து வரும் காளைகளை அடக்குவதில் ஒவ்வொரு சுற்றிலும் வீரர்கள் மல்லுக்கட்டி வருகின்றனர். அதன்படி சிக்காமல் சீறும் காளையின் உரிமையாளர்களுக்கும், காளைகளை துணிச்சலுடன் பாய்ந்து அடக்கும் வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இதுவரை நடந்து முடிந்துள்ள 6 சுற்றுகளின் முடிவில் 538 காளைகள் மற்றும் 300 வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இதில் மதுரையைச் சேர்ந்த கார்த்தி 15 காளைகளை அடக்கி முதல் இடத்தில் உள்ளார். இவர் 2022ஆம் ஆண்டு நடந்த இதே அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்பரிசு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டவது இடத்தில் 13 காளைகளை அடக்கி அவனியாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித் உள்ளார். தேனியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் 7 காளைகளை அடக்கி மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இதற்கிடையே 7ஆம் சுற்றில், வாடி வாசலில் இருந்து சீறி வந்த ஒரு காளை மாட்டுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் களத்திலேயே அமர்ந்த காளைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதனைத்தொடர்ந்து போட்டி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தற்போது வரை 9 மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் 19 பேர், பார்வையாளர்கள் ஒருவர், காவல்துறை சார்பு ஆய்வாளர் ஒருவர் என மொத்தம் 42 பேர் இதுவரை காயமடைந்துள்ளனர். அதில் 8 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
துப்பாக்கியுடன் ரஜினி பொங்கல் வாழ்த்து!
ஆளுநர் முதல் அண்ணாமலை வரை: அரசியல் தலைவர்களின் பொங்கல் வாழ்த்து!