ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு, கால் டாக்சி செயலிகள் மீது கட்டுபாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (மார்ச் 19) வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. auto stike today aginst tn govt
இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 2013ம் ஆண்டு தான் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது குறைந்தபட்ச தூரத்துக்கு ரூ.25ம், கிலோ மீட்டருக்கு ரூ.12ம் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது.
இப்போது விலைவாசி பலமடங்கு ஏறிவிட்டது. அன்றைக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.55-க்கு கிடைத்தது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102 ஆகிவிட்டது.
எனவே, ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனே உயர்த்தி நிர்ணயிக்குமாறு 19ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 1.5 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது. மருத்துவமனை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ஆட்டோ இயங்கும்.
எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம், ராஜரத்தினம் ஸ்டேடியம், அண்ணா சாலை தாராப்பூர் டவர் போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். இதில், அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் பங்கேற்கின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார்.