இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் 138ஆவது ஒருநாள் போட்டியாகும்.
இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கேப்டன் விராட் கோலி துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மாவையும், ஷிகர் தவனையும் களமிறக்கினார். மூன்றாவதாக கே.எல்.ராகுலுயும், நான்காவதாக விராட் கோலியும் களமிறங்கினார்கள்.
துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா 4.3 ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவன் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 121 ரன்களை குவித்தது. இந்த ஜோடி 27.1 ஆவது ஓவரில் பிரிந்து, விராட் கோலி களமிறங்கினார். பிறகு தொடர்ச்சியாக இந்திய அணி குறிப்பிட்ட இடைவெளியில் சீராக விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஷிகர் தவன், ராகுல் ஆகிய இருவரைத் தவிர மற்ற வீரர்களில் ஒருவர் கூட 30 ரன்களைத் தாண்டவில்லை. இறுதியாக இந்திய அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்களை சேர்த்தது. 50 ஓவரில் 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு தற்போது விளையாடி வருகிறது . தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 14 ஓவர்களில் 110 ரன்களை சேர்த்துள்ளது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் அரை சதத்தைக் கடந்து விளையாடிக்கொண்டிருக்கிறனர்.
2019ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியுற்று வெளியேறிய ஆஸ்திரேலிய அணி, களம் காணும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும். பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அடுத்தடுத்து வென்ற உற்சாகத்துடன் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் களம் காண்கிறது. அதேபோல் ஆஸ்திரேலிய அணி கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 3-2 என்று தொடரை கைப்பற்றியது.
