ADVERTISEMENT

இதுவரை 6 வீரர்கள் அவுட்… கடும் நெருக்கடியில் தவிக்கும் ஆஸ்திரேலியா

Published On:

| By christopher

இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் 6 முக்கிய வீரர்களை இழந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது.

ADVERTISEMENT

இதுவரை நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1 ஆம் தேதி இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸின் தாயார் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக பேட் கம்மின்ஸ் நாடு திரும்பி நிலையில் அவர் 3ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இதன் காரணமாக 3வது டெஸ்ட் போட்டியில் இதுவரை துணை கேப்டனாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பேட் கம்மின்ஸ் 4ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது என்பது அவரது தாயாரது உடல் நிலையைப் பொறுத்தே அமையும்.

ADVERTISEMENT

இந்நிலையில் அவருக்கு பிசிசிஐ உள்பட கிரிக்கெட் உலகைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளையில் கேப்டன் பேட் கம்மின்ஸின் விலகல் ஏற்கெனவே வீரர்கள் பற்றாக்குறையால் தவித்து வரும் ஆஸ்திரேலியா அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இருந்து இதுவரை முக்கியமான 6 ஆஸ்திரேலிய வீரர்கள் விலகியுள்ளனர்.

சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்வெப்சன் தனக்கு குழந்தை பிறந்ததன் காரணமாக முதல் போட்டிக்கு பிறகு சொந்த நாட்டுக்கு திரும்பினார்.

அதன்பின்னர் காயம் காரணமாக டேவிட் வார்னர் மற்றும் ரென்ஷா ஆகியோர் கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினர்.

ஜோஷ் ஹசில்வுட் மற்றும் அஸ்டன் அகர் ஆகியோர் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் சொந்த காரணத்திற்காக தொடரில் இருந்து வெளியேறினர்.

இதில் ஒரு நல்ல செய்தியாக, முதல் இரு தொடர்களில் விலகி இருந்த ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கடைசி இரு போட்டிகளில் விளையாட உள்ளார்.

எனினும் முக்கிய வீரர்கள் விலகலால் நெருக்கடியில் தவிக்கும் ஆஸ்திரேலியா அணி, தங்களது சொந்த மண்ணில் அசூர பலத்துடன் விளையாடி வரும் பலம் வாய்ந்த இந்தியாவை சமாளிப்பது இன்னும் கடினமாகி உள்ளது என்பதே உண்மை!

கிறிஸ்டோபர் ஜெமா

ஸ்டாலினை டென்ஷன் ஆக்கிய சீமான்

மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை : பிரச்சாரத்தில் முதல்வர் கொடுத்த அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share