இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (மார்ச் 22 ) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலை வகிப்பதால் இன்றைய போட்டி தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் . இதில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
துவக்க ஜோடியான டிராவிஸ் ஹெட்- மிட்செல் மார்ஷ் சிறப்பாக விளையாடினர். ஸ்கோர் 68 ஆக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. டிராவிஸ் ஹெட் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

மறுமுனையில் அரை சதத்தை நோக்கி பயணித்த மிட்செல் மார்ஷ் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.
லபுசங்கே (28), அலெக்ஸ் கேரி (38), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (25), சீன் அப்பாட் (26) ஆகியோரும் தங்கள் பங்களிப்பை வழங்க, 49 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அக்சர் பட்டேல், சிராஜ் தலா 2 விக்கெட் எடுத்தனர்
50 ஓவர்களில் 270 ரன்கள் அடித்தால் தொடரை கைப்பற்றலாம் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது. ரசிகர்களிடம் இந்திய அணி தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்