மத்திய அரசின் வருமான வரித்துறையினர் இன்று (ஏப்ரல் 24) காலை முதலே தமிழ்நாட்டில் பிரபல கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சென்னை,கோவை மற்றும் பெங்களூரு, தெலங்கானா உள்ளிட்ட 50 இடங்களில் ரெய்டு நடந்துகொண்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்த ரெய்டில் முக்கியத்துவமாக அண்ணா நகர் திமுக எம்.எல்.ஏ. மோகனின் மகனும் திமுக ஐடி விங் மாநில துணைச் செயலாளருமான கார்த்திக் வீட்டில் நடந்த ரெய்டு பார்க்கப்படுகிறது. அண்ணா நகர் கார்த்திக் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர். மேலும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
அண்ணா நகர் கார்த்திக் வீட்டில் நடக்கும் ரெய்டுக்கு அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த ரெய்டாக பார்க்கப்படுவது ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் நடக்கும் ரெய்டு. ஆடிட்டர் சண்முகராஜ் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் ஆடிட்டர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 24) பெங்களூருவில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,

“பணப் பரிவர்த்தனையை இவர்தான் செய்தார் என்று நாங்கள் சொன்ன எம்.எல்.ஏ.வின் பையன் வீட்டில் ரெய்டு நடந்திருக்கிறது. வெறும் ஜி ஸ்கொயர் என்று மட்டும் பார்க்காதீர்கள். ஏன் மொத்தமாக ரெய்டு பண்ணுகிறார்கள்? நாங்கள் முதலில் இருந்து வைக்கிற குற்றச்சாட்டு இந்த பணம், எப்படி வெளியே போகிறது? இதை எந்த ஆடிட்டர் டீல் பண்றாங்க?
முதல்வர் ஸ்டாலின் துபாய் போவதற்கு முன்னாடி முதல் குடும்பத்தைச் சார்ந்த ஆடிட்டர் ஒரு வாரத்துக்கு முன்பே ஸ்பெஷல் விமானத்தில் ஏன் துபாய் போனார்? அதன் பிறகு நோபிள் நிறுவனத்தில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் வருகிறது என்று ஏன் சொன்னீர்கள்? நோபிள் ஸ்டீல்ஸ், நோபிள் பிரமோட்டர்ஸ் வேறு வேறு கம்பெனிகளில் உதயநிதி, அன்பில் மகேஷ் ஏன் டைரக்டர்களாக இருந்திருக்கிறார்கள்? அந்த ஆடிட்டர் அரசு ஊழியர் இல்லை. பிறகு ஏன் அவர் துபாய் சென்றார்?
இது எல்லாவற்றையும் முடிச்சுப் போட்டு பாருங்க. இந்த பணத்தை வெளியே கொண்டுபோய் அதை லீகல் இன்கம் ஆக மாற்றுவது ஆடிட்டர். அவர் வீட்டிலும் ரெய்டு போயிட்டிருக்குல்ல? அதனால தமிழகத்தில் இருக்கும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஊழல் நம்மை அரித்துக் கொண்டிருக்கிறது. கரையான் பூச்சி போல அரித்துக் கொண்டிருக்கிறது. இதை கேள்வி கேட்க வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு இருக்கிறது. அதை மட்டும்தான் செய்கிறோமே தவிர எக்ஸ்ட்ராவா நாங்கள் எதையும் செய்யவில்லை” என்று கூறியிருக்கிறார் அண்ணாமலை.
–வேந்தன்
திருச்சி மாநாடு: தொண்டர்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த ஓபிஎஸ்
12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

Comments are closed.