டிஜிட்டல் திண்ணை: அட்டாக் உதயநிதி… ஆர்டர் போட்ட மோடி- டெல்லியில் நிர்மலா தாண்டவம் பின்னணி!

Published On:

| By Aara

Nirmala sitharaman press meet background

வைஃபை ஆன் செய்ததும் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பிரஸ்மீட் வீடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது. அதை பொறுமையாக பார்த்து முடித்த வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. Nirmala sitharaman press meet background

”தமிழ்நாடு கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் மிக்ஜாம் புயலை எதிர்கொண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் கடும் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகின. அந்த நிவாரண பணிகளில் ஈடுபட்டிருக்கும் போதே டிசம்பர் 17 ,18 தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையான மழை பொழிவால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டு கரைகள் உடைப்புக்கு உள்ளாகி பல்வேறு கிராமங்கள் மூழ்கின.

இந்த இரு வெள்ள பாதிப்புகளுக்கும் நிவாரணம் வழங்குவதற்காகவும் மற்ற சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும் மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து நிதி கேட்டது. சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்வையிட பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் வந்தார். உரிய நிதியை தமிழ்நாட்டுக்கு அளிப்பதாக அவர் உறுதி அளித்துவிட்டு சென்றார்.

ஆனால் அதன் பிறகும் தமிழ்நாடு கேட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. மத்திய குழு பார்வையிட்டு விட்டு மதிப்பீடு செய்து நிதியளிக்கும் என்றார்கள். மத்திய குழுவும் வந்து தமிழ்நாடு அரசின் நிவாரண பணிகளை பாராட்டி விட்டு சென்றதே தவிர நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்புகள் இல்லை.

Image

இந்த நிலையில் தென் மாவட்ட வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு தமிழ்நாடு அரசுக்கு அடுத்த கட்ட நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. மீண்டும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இதற்கிடையே தமிழ்நாடு அரசு நிதி கேட்பது குறித்து சென்னை வந்த மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ’நாங்க என்ன ஏடிஎம் மா வைச்சிருக்கோம்?’ என்று கேட்க… அதற்கு பதில் அளிக்கும் வகையில், ’நாங்கள் என்ன உங்க அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம்?’ என்று பதில் அளித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இது மட்டுமல்ல தென் மாவட்ட வெள்ளப்பெருக்கு தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெளிவான எச்சரிக்கை செய்யவில்லை என்று தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பேசினார். முதலமைச்சர் ஸ்டாலினும் வானிலை ஆய்வு மையத்தின் தாமதமான எச்சரிக்கையை டெல்லியில் வைத்துக் கொண்டே சாடினார்.

இந்த நிலையில் டிசம்பர் 19ஆம் தேதி இரவு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாட்டுக்கான வெள்ள நிவாரண நிதி பற்றி ஒரு மனுவை அளித்தார். பின் 21 ஆம் தேதி, மத்திய அரசு நிதியளிக்கவில்லை, தமிழ்நாடு அரசு தன் நிதியைக் கொண்டே நிவாரணம் வழங்கி வருகிறது என்று கூறினார்.

இந்த பின்னணியில்தான்… ஸ்டாலின் மோடியை சந்தித்து விட்டு வந்த இரண்டு நாட்கள் கழித்து டெல்லியில் தமிழ்நாடு அரசின் வெள்ள நிவாரண கோரிக்கையை மட்டுமே மையமாக வைத்து ஒரு நீண்ட பிரஸ்மீட்டை நடத்தியிருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தேசிய பேரிடர் என்ற வரையறைக்குள் தமிழ்நாடு சந்தித்த வெள்ள பாதிப்புகள் வராது என்று கூறியவர், மழை நீர் வடிகால் பணிகள் 4000 கோடிக்கு செய்தோம் என்று தமிழக அமைச்சர்கள் சொன்னது என்ன ஆச்சு என்றும் கேள்வி எழுப்பினார். அது மட்டும் அல்ல உங்கள் அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம் என்று அமைச்சர் உதயநிதி கூறியதற்கும் கடுமையாக பதில் அளித்தார் நிர்மலா சீதாராமன்.
ஒரு மாநிலம் தன் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள மத்திய அரசிடம் நிதி கேட்கும் போது மத்திய நிதி அமைச்சர் இவ்வாறு குறி வைத்து தாக்குதல் நடத்துவது போல பேசி இருப்பது பற்றி டெல்லி வட்டாரங்களில் விசாரித்தபோது…

ஸ்டாலின், உதயநிதி, தலைமைச் செயலாளர் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் மத்திய அரசுக்கு சென்றடைந்தன. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனக்கு நெருக்கமான சில ஐஏஎஸ் அதிகாரிகளோடு பேசி இருக்கிறார். அப்போது அவர்கள், ’தேசிய பேரிடர் என்பது பல்வேறு மாநிலங்களை ஒரே நேரத்தில் பாதிக்கும் இயற்கை சீற்றங்களுக்கு தான் பொருந்தும். பூகம்பமோ சுனாமியோ ஏற்பட்டு ஒரு மாநிலத்தில் மூன்றில் ஒரு பகுதி மக்களோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாதிக்கப்படுவது தான் தேசிய பேரிடர் ஆகும். தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரண நிதி என்று கேட்கலாம். ஆனால் தேசிய பேரிடர் என்பதில் வரையறுப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன’ என்றெல்லாம் கூறியுள்ளார்கள்.

Image
நேற்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்ற அண்ணாமலை இன்று காலை மத்திய இணை அமைச்சர் முருகனோடு சேர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இவர்கள் சந்திப்பதற்கு முன்பே தமிழ்நாடு வெள்ள நிவாரண கோரிக்கைகள் பற்றியும் இங்கே வெள்ளத்தை மையமாக வைத்து நடக்கும் அரசியல் பற்றியும் முழுமையான ரிப்போர்ட் பிரதமர் மோடிக்கு சென்றிருக்கிறது.

அதன் அடிப்படையில் தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து திமுகவையும் உதயநிதியையும் கடுமையாக தாக்கி பதில் தருமாறு நிர்மலா சீதாராமனுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இன்று காலை அண்ணாமலை, முருகன் ஆகியோருடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு பிரஸ்மீட் வைத்து தேசிய பேரிடர் குறித்தும் வானிலை மையம் குறித்தும் உதயநிதி குறித்தும் தன்னுடைய ஆக்ரோஷமான ரியாக்ஷனை வெளிப்படுத்தினார் நிர்மலா சீதாராமன்.

இது குறித்து திமுகவும் உடனடியாக பதில் அளித்திருக்கிறது. தமிழ்நாடு மக்களை நிதி அமைச்சர் நிர்மலா கொச்சைப்படுத்தி விட்டார் என்று அமைச்சர்  தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.

இதற்கிடையே நிர்மலா சீதாராமனின் ஆக்ரோஷமான வீடியோவை பகிர்ந்து தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்க வாய்ப்பு இல்லை என்று அவர் கூறிய விஷயத்தை மக்களிடம் கொண்டு செல்லுமாறும் எவ்வாறு ஆளுநர் நமக்கு பிரச்சார பீரங்கியாக செயல்பட்டு வருகிறாரோ…

அதேபோல நிர்மலா சீதாராமனின் இந்த பிரஸ் மீட்டையும் நமக்கான பிரச்சாரமாக மாற்ற வேண்டும் என்றும் திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பேரிடர் நிதியில் பெரிய இடி : அப்டேட் குமாரு

”ஹிஜாப் தடை நீக்கப்படும்” – சித்தராமையா உறுதி!

Nirmala sitharaman press meet background

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share