இந்தியில் ஜவான் படத்தைத் தொடர்ந்து, தனது 6வது படத்தில் அல்லு அர்ஜூனுடன் கைக்கோர்த்துள்ளார் அட்லீ. இதுதொடர்பான அறிவிப்பு வீடியோவை இன்று (ஏப்ரல் 8) வெளியிட்டுள்ளது சன்பிக்சர்ஸ் நிறுவனம். atlee join hands with allu arjun 22 and sun pictures
கடந்த 2013ஆம் ஆண்டு ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் ஆகியோர் நடிப்பில் உருவான ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் அட்லீ.
அதன் பின்னர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று ஹிட் படங்களை இயக்கினார்.
அதனைத்தொடர்ந்து யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் அவரின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக பாலிவுட்டின் பாட்ஷா என ரசிகர்களால் அழைக்கப்படும் ஷாருக்கானுடன் கைக்கோர்த்தார் அட்லீ.
பான் இந்தியா திரைப்படமாக வெளியான ஜவான் கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஆயிரம் கோடி வசூலித்தது. அதன்மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எடுத்த தமிழ் இயக்குநர் என்ற பெருமையை பெற்றார் அட்லீ.
அடுத்தடுத்த அபார வெற்றியின் காரணமாக ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனமும் அவர் மேல் குவிந்தது.
இந்த நிலையில் புஷ்பா, புஷ்பா 2 படத்தின் மூலம் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள அல்லு அர்ஜூனுடன் கைகோர்த்துள்ளார் அட்லீ. இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், படத்தின் அப்டேட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவை அல்லு அர்ஜூன் பிறந்தநாளான இன்று வெளியிட்டுள்ளது.
அதில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பாளர் கலாநிதி மாறனை சந்தித்த அல்லுவும், அட்லீயும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள LOLA VFX ஸ்டூடியோவுக்கும் செல்லும் காட்சிகளும், படத்தின் கதையை அங்குள்ள அமெரிக்க டெக்னீஷியன்கள் வியந்து பேசும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றன.