எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற முன்னணி நிறுவனமான ஏத்தர், தற்போது மூன்று எலக்ட்ரிக் இருசக்கர வாகன மாடல்களை வெளியிட தயாராகி உள்ளது.
அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள டீசரில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி மூன்று இருசக்கர வாகனம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறது.
இருசக்கர வாகனம் என்றாலே பெட்ரோல் மூலம் மட்டுமே இயங்குபவை என்கிற நிலை மாறி தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற தொடங்கிவிட்டது.
ஏத்தர் நிறுவனம் 450 வரிசையில் வாகனங்களை வெளியிட்டு வருகிறது, அந்த வகையில் பார்க்கும் போது இப்போது அறிமுகப்படுத்தப்போகும் இருசக்கர வாகனங்களில் ஒன்று 450 எஸ் என்று தெரிய வந்துள்ளது, மற்றொன்று 450 எக்ஸ் 4th gen ஆக இருக்கக்கூடும் என யூகிக்க முடிகிறது.
இந்த இரண்டு மாடல்களும் ஓலாவின் எஸ்1 ஏர் மற்றும் எஸ்1 ப்ரோ வகை மின்சார வாகனங்களுக்கு போட்டியாக களமிறங்கலாம் என்ற தகவல்கள் வெளியானாலும், மூன்றாவது மாடல் எலக்ட்ரிக் வாகனத்தைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்க பெறாமல் ரகசியமாகவே உள்ளது.
ஏத்தர் நிறுவனம் வெளியிட்டிருந்த டீசரில் அதிக எனர்ஜி, ஆக்சிலரேஷன் மற்றும் பூட் ஸ்பேஸிங்கில் தாராளமான லக்கேஜ் வசதி போன்றவை இருக்கப்போவதாகவும் இடம்பெற்றிருந்தன.

இதுபோக அறிமுகப்படுத்தப்போகும் இந்த ஏத்தர் 450 எஸ் ரக இருசக்கர வாகனத்தின் பேட்டரி 3 kwh-ஐ கொண்டிருக்கும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.
இது 90கிமீ வரை வேகத்தில் செல்லக்கூடிய இருசக்கர வாகனமாகவும், 1.3 லட்சம் விற்பனை விலையில் சந்தைக்கு வருகிறது.
ஏத்தர் 450 எஸ் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஆனால், அடுத்து வரவுள்ள இரண்டு இருசக்கர வாகனம் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதால் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே செல்கிறது.
ஏத்தரின் ட்விட்டர் பக்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு புதிய எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் அறிமுகம் நேரலையாக சமூக வலைதளங்களில் ஒளிபரப்பப்படும் என்று இணையதள லிங்க்கையும் வெளியிட்டுள்ளது.

இதனால் மின்வாகனங்களை நாடும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்திருப்பது சமூக வலைதளங்களில் உலவும் பதிவுகளின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
ஏனெனில் இந்திய சந்தையில் விற்கப்படும் மற்ற எலக்ட்ரிக் வாகனங்களின் தரத்தை காட்டிலும் ஏத்தரின் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மீதான நம்பிக்கை மக்களை விட்டு போகவில்லை என்பதற்கு 450 எஸ் குறித்த காத்திருப்பு பதிவுகளே சாட்சியாக இருப்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்கப்போவதில்லை.
பவித்ரா பலராமன்
கண்ணகி கோபத்தால் சரிந்த பாண்டியன் செங்கோல் தெரியுமா? -மக்களவையில் கனிமொழி ஆவேசம்!
