சொத்துக் குவிப்பு வழக்கு : ஓபிஎஸுக்கு எதிராக சூமோட்டோ பதிவு!

Published On:

| By Kavi

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீது சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை கீழமை நீதிமன்றங்கள் விடுதலை செய்தன.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து  வழக்குப்பதிவு செய்தார்.

“நீதிபதியின் இந்த செயல் பழிவாங்கும் நடவடிக்கை போல் உள்ளது. தேர்ந்தெடுத்து குறிப்பிட்டு திமுக அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்குகளில் விடுதலை செய்யப்பட்ட ஓபிஎஸ், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியிருந்தார்.

எனினும் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட விரும்பவில்லை என்று தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,   “நான் சட்டபடி  நடந்துகொள்கிறேன். பொது வாழ்வில் உள்ளவர்கள் பேசுவதை பற்றி நான் கவலை கொள்வதில்லை” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் ஓபிஎஸ் மீது தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

2001- 2006 வரையிலான அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மீது 2006ல் திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை நீதிமன்றம் 2012ஆம் ஆண்டு ஓ.பன்னீர் செல்வத்தை விடுதலை செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

பிரியா

லவ்குருவுக்கு வந்த சோதனை: அப்டேட் குமாரு

நாளை நள்ளிரவு முதல் உயரும் சுங்கக்கட்டணம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share