ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானை வெளுத்த இந்தியா- 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Published On:

| By Mathi

India Win Match Against Pakistan

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல், அதன் பின்னர் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை ஆகியவற்றால் பாகிஸ்தானுடனான நமது நாட்டின் உறவு சீர்குலைந்து போயுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் இந்திய அணியின் அபார பந்து வீச்சை பாகிஸ்தான் அணியால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்களை மட்டுமே பாகிஸ்தான் எடுத்திருந்தது. இந்திய அணியின் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ADVERTISEMENT

இதனையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில் களமிறங்கி அதகளமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபிஷேக் 13 பந்துகளில் 31 ரன்களையும் சுப்மன் கில் 17 பந்துகளில் 10 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி இணைந்து நிலைத்து நின்று ரன்களை விறுவிறுவென குவித்தது. திலக் வர்மா, 31 பந்துகளில் 31 ரன்களைக் குவித்த நிலையில் அவுட் ஆனார். இதனையடுத்து சூர்யகுமார் யாதவுடன் ஷிவம் துபே கை கோர்த்தார்.

ADVERTISEMENT

இந்திய அணி 15.5 வது ஓவரிலேயே வெற்றி இலக்கான 128 ரன்களை தாண்டி 131 ரன்களை, 3 விக்கெட்டுகளை இழந்து எட்டியது. இதனையடுத்து பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், 37 பந்துகளில் 47 ரன்கள், ஷிவம் துபே 7 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் அணியின் சயீம் அயூப், இந்திய அணியின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

நாடு முழுவதும் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டி விளையாடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டங்கள் நடைபெறும் சூழ்நிலையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபாரமான வெற்றியைப் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share