செஸ் ஒலிம்பியாட்டை அடுத்து இன்னொரு பிரம்மாண்டம்: மோடியிடம் புக்கிங் செய்த ஸ்டாலின்

Published On:

| By Jegadeesh

சென்னையில் தொடங்கியுள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி விழா தமிழக அரசுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தரப்பிடம் இருந்து பாராட்டுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் இதேபோல ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இன்று (ஜூலை 29) எழுதியுள்ள கடிதத்தில்,

“சென்னையில் நடைபெற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டதற்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்ததற்கும் தங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

இதேபோல சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை விரைவில் வழங்கிட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் நீங்கள் ஆர்வம் காட்டி வருகிறீர்கள். அந்த அடிப்படையில் சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதுவதற்கு தேவையான ஒத்துழைப்பை கொடுக்க வேண்டுகிறேன்.

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று 2024 ஜனவரியில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு, 6-5-2022 அன்று தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளதை தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தப் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான உத்தரவாதங்களை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை விரைவில் வழங்கிட வேண்டியுள்ளது.

ஏற்கெனவே மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு இதுதொடர்பாக 23-5-2022 அன்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. செப்டம்பர் 2022 இறுதிக்குள் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்த உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளதால், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை விரைவில் அதனை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்-

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share