அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று (ஏப்ரல் 30) தெரிவித்துள்ளார். Ashwini Vaishnav says Caste census
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசியபோது,
“ரூ.22,864 கோடி மதிப்பீட்டில் ஷில்லாங்கிலிருந்து சில்சார் வரையிலான அதிவேக நெடுஞ்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2025-26 சர்க்கரைப் பருவத்திற்கான கரும்புக்கான நியாயமான மற்றும் லாபகரமான விலை குவிண்டாலுக்கு ரூ.355 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசும்போது,
“சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் எப்போதும் எதிர்த்து தான் வந்துள்ளது. 2010 ஆம் ஆண்டில், மறைந்த டாக்டர் மன்மோகன் சிங், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பரிசீலிக்க அமைச்சர்கள் குழு ஒன்றை அமைத்தார். பெரும்பாலான அரசியல் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பரிந்துரைத்தன. இருப்பினும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
காங்கிரசும் இந்தியா கூட்டணியும் சாதிவாரி கணக்கெடுப்பை ஒரு அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தியுள்ளன.
சில மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. இதை சில மாநிலங்கள் சிறப்பாகச் செய்திருந்தாலும், வேறு சிலர் அரசியல் ஆதாயங்களுக்காக வெளிப்படைத்தன்மையற்ற முறையில் ஆய்வு நடத்தியுள்ளனர்.
இத்தகைய ஆய்வுகள் சமூகத்தில் சந்தேகங்களை உருவாக்கியுள்ளன. இதனால், நமது சமூகக் கட்டமைப்பு பாதிக்கப்படாமல் இருக்க, எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும்” என்று தெரிவித்தார். Ashwini Vaishnav says Caste census
