INDvsENG 5th TEST : இங்கிலாந்து எதிரான தொடரை சமன் செய்ய இந்திய அணி கடைசி நாளான இன்று (ஆகஸ்ட் 4) மீதமுள்ள 4 விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளது.
ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியின் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான நேற்று 374 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பொறுமையாக ஆடியது. குறிப்பாக ஜோ ரூட் (105) மற்றும் ஹாரி புரூக்கின் (111) அபார சதம் அந்த அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு வந்துள்ளது. இந்த ஜோடி 195 ரன்கள் குவித்தது.
நேற்றைய நாள் முடிவில் இங்கிலாந்து அணி 339 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. களத்தில் ஜேமி ஸ்மித் (2) மற்றும் ஜேமி ஓவர்டன் (0) களத்தில் உள்ளனர்.

அதேநேரத்தில் முக்கியமான கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 4 விக்கெட்டுகள் தேவை. தோள்பட்டை காயம் காரணமாக விலகிய கிறிஸ் வோக்ஸ் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லையென்றால் அது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.
இந்த போட்டியை வென்றால் மட்டுமே தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்ய முடியும். எனவே கடைசி நாளான இன்று வெற்றிக்காக இந்திய அணி போராடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெற முன்னாள் இந்திய வீரரான தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் ஒரு ஐடியா கொடுத்துள்ளார்.
தனது யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “இந்த போட்டியில் இந்தியா ஒரு இடத்தில் தோல்வியடைந்துள விட்டது. இந்த ஆடுகளத்தில், 374 ரன்கள் என்பது ஒரு பெரிய ஸ்கோர். ஆனால் எதிரணிக்கு அழுத்தத்தை அதிகரிக்கும் ஆயுதமான விக்கெட்டுகளை அள்ளும் பந்துவீச்சை இந்திய அணி வீசவில்லை. இதில் ஆஸ்திரேலியா அணி ஒரு சிறந்த உதாரணம்.
விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுக்கும்போது, அது எதிரணி மீது பெரிய அழுத்தத்தை உருவாக்கும். இந்த டி20 சகாப்தத்தில் அதிக ரன்கள் குவிப்பது மற்றும் விக்கெட்டுகளை எடுப்பதே முக்கியமாக பார்க்கப்படுகிறது. எனவே, கடைசி நாளான இன்று போட்டியை இந்திய அணி டி20 போன்று அணுக வேண்டும்” என கூறியுள்ளார்.
