அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ளதாக அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியில் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி 32 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிரமாக செயல்பட்டு கொள்ளையர்களை அடுத்தடுத்து கைது செய்தனர்.
நேற்று (ஆகஸ்ட் 18) கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையின் போது, தங்க நகைகள் அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருப்பதாக வாக்குமூலம் அளித்தனர்.
அதன்படி, காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து நகைகளை மீட்டதுடன், மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து காஞ்சிபுரம் டிஐஜி சத்யபிரியாவிடம் தனிப்படை போலீசார் தகவல் அளித்தனர்.
இதனை தொடர்ந்து, அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜை தற்போது பணியிடை நீக்கம் செய்து டிஐஜி சத்யபிரியா உத்தரவிட்டுள்ளார். காவல் ஆய்வாளர் அமல்ராஜ் மற்றும் அவரது மனைவியிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கொள்ளை சம்பவம் தொடர்பாக 5 பேர் கைதான நிலையில், மேலும் 6 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோனிஷா
அரும்பாக்கம் to அச்சரப்பாக்கம்: இன்ஸ்பெக்டர் வீட்டில் 3.5 கிலோ தங்கம்! நடந்தது என்ன?
