படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

Published On:

| By admin

2010 ஆம் ஆண்டு வெளியான வம்சம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. அப்படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்திருந்தார். அதன்பின் பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் அவை எல்லாமே நகரத்துப் படங்கள்தான்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ராட்சசி இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்படத்தில் பெரிய மீசை, கிருதாவுடன் கிராமத்து இளைஞன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்ததால் ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட மற்ற படங்களைப் பின்னுக்குத் தள்ளிவைத்துவிட்டு மீசையைப் பெரிதாக வளர்த்துக் கொண்டு படப்பிடிப்புக்குத் தயாரானார்.

ADVERTISEMENT

அந்தப்படத்தை, திமுக சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தனது ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பை ஒரேகட்டமாக முடித்துவிடத் திட்டமிட்டு பரமக்குடி பக்கம் படப்பிடிப்புக்கு படக்குழுவினர் சென்றனர். ஆனால் ஆறு நாட்களிலேயே சென்னை திரும்பி இருக்கிறார் அருள்நிதி.

ADVERTISEMENT

படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலிருந்தே தொழிலாளர்களுக்கு தினசரி பேட்டா உட்பட எதையும் சரியாக தயாரிப்பாளர் தரப்பில் கொடுக்கவில்லையாம். படப்பிடிப்புக்குத் தேவையான வசதிகளையும் முறையாகச் செய்துகொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நான்காவது நாளே சில தொழிலாளர்கள் படப்பிடிப்புக்கு வரமாட்டோம் என்று சொல்லி அறையிலேயே இருந்து கொண்டார்கள். தகவல் அறிந்த அருள்நிதி நல்ல கதை என்று ஒப்புக்கொண்டேன். ஏற்கெனவே சில படங்கள் எடுத்தவர் என்பதால் அம்பேத்குமார் தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இவ்வளவு மோசமாக இருப்பார் என்று நினைக்கவே இல்லை. எல்லாவற்றையும் சரி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு சென்னை திரும்பிவிட்டாராம்.

கேட்கிறவர்களுக்கு விரைவில் வெளியாகவிருக்கும் இன்னொரு படத்தின் விளம்பரப் பணிகளுக்காக வந்துள்ளதாகச் சொல்லிவிடுகிறேன் என்கிற தற்காப்பு சலுகையையும் தயாரிப்பாளருக்கு அருள்நிதி கொடுத்திருக்கிறாராம்.

ADVERTISEMENT

ஏற்கெனவே இந்த நிறுவனம் பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் படமும் திட்டமிட்டபடி நடக்காமல் இருக்கும் நேரத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பும் தடைபட்டிருப்பது மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் விசயமாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் இருக்கிறது.

**-இராமானுஜம்**

Photo of author
admin
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share