ஆதங்க சூடு! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

அரங்க மேடையில் அரிதாரம் பூசி ஒளிவாங்கி நிற்பதைப் போன்றதோர் போதை வேறொன்றில்லை.

நாடக மேடை என்பது மற்றோர் உலகம். பிரம்மனுக்கு ஈடாக வாழ வாய்க்கும் தருணம்.

ஆம், மேடை ஏறி விட்டால் கிழக்கும் மேற்கும் கலைஞர்களின் உரிமை. வடக்கு எது, தெற்கு எது என்பதை வசனங்களால் தீர்மானித்துக்கொள்ள முடிந்த வாழ்க்கை. 17 வயதில் மேடையேறிய எனக்கு இன்னமும் அந்தப் போதை தீரவில்லை.

நாடக மேடையை எனக்குப் பழக்கிவிட்டவர் ஆசான் “நாடகப் பணி” அருணகிரி.

திருவல்லிக்கேணியில் சிவராஜபுரத்துக்கு நேர் பின்னால் அமைந்து இருக்கும் கார்ப்பரேஷன் கிரவுண்டில் நண்பர்களோடு வாலிபால் ஆடுவது எனக்கு வழக்கம். எங்களுக்கு வாலிபால் கோச்சாக வந்து சேர்ந்தவர் இன்று ஆர்.டி.ஓ. ஆபீஸில் பெரிய பதவியில் இருக்கும் திரு.ஸ்ரீனிவாசன். அருமையான பகுதிநேர நாடகக் கலைஞரும்கூட.

வாலிபால் பிராக்டீஸ் மேட்ச் முடிந்ததும் அனைவரும் கிரவுண்டில் சுற்றி அமர்ந்துகொள்ள எல்லோரையும் போல மிமிக்கிரி செய்து கலாய்த்துக் கொண்டிருப்பேன். ஒருமுறை “உனக்குள்ள ஒரு நடிகன் இருக்கான்ப்பா… என்னோட வா…” என்று அழைத்துக்கொண்டு போய் அருணகிரி சாரிடம் அறிமுகப்படுத்தி விட்டார் சீனு சார்.

ஒல்லியான தேகம். ஒடுக்கு விழுந்த முகம். வெள்ளையும் பழுப்பும் கலந்தோடிய ஜிப்பாவும் வேட்டியும். சுறுசுறு பேச்சு. விறுவிறு நடை. விரக்தி கலந்த புன்னகை. சன்னமான குரல். அதில் அதட்டல் தொனி. கூட்டிக் கலந்தால் “நாடகப் பணி” அருணகிரி. “நாடகப் பணி” என்பது அவர் நடத்திக்கொண்டிருந்த பத்திரிகையின் பெயர்.

சிலம்புச்செல்வர் ம.பொ.சி அவர்களின் “தமிழரசு” கட்சியில் அருணகிரி சாரும் புலவர் கீரனும் ஒன்றாக இருந்தவர்கள்.

தெள்ளு தமிழ் வசனங்களுக்குப் பேரெடுத்த வசனகர்த்தா இளங்கோவன் அவர்களைப் போல, கலைஞர் கருணாநிதி அவர்களைப் போல வசன வீச்சில் தானும் பேரெடுத்து விட முடியும் என்னும் நம்பிக்கையோடும் கனவுகளோடும் சேலத்திலிருந்து கிளம்பி சென்னை வந்தவர் நாடகப் பணி அருணகிரி.

நாடக மேடையைப் பாசாங்கில்லாமல் நேசித்தவர். ரொம்பவே “ஸ்ட்ரிக்ட்” ஆன ஆசான்.

**பீஷ்மரின் சபதம்**

அப்போது புகழ்பெற்ற “பீஷ்மரின் சபதம்” நாடகத்தின் அரங்கேற்ற ரிகர்ஸல் போய்க் கொண்டிருந்தது.

மாலை நேரத்து திருவல்லிக்கேணியில், மாரா நர்ஸரி ஸ்கூல் ஹாலில், மங்கிய குண்டு பல்பு ஒளியில் எஸ்.ஆர். விஜயா (பாஞ்சாலி), ரவிசங்கர் (பீஷ்மர்), எஸ்.பி.சுந்தர் (கர்ணன்), மோகன் (கண்ணன்), அனுமந்தராவ் (துரியோதனன்), ஸ்ரீனிவாசன் (துரோணர்), நந்தகுமார் (கிருபர்) போன்ற சீனியர் ஆர்டிஸ்டுகள் எல்லோரும் பழைய மரப் பெஞ்சுகளில் அமர்ந்து இயல்பாக மெல்லிய குரலில் நாட்டு நடப்பு பேசிக்கொண்டிருப்பார்கள்.

டைரக்டர் அருணகிரி உள்ளே நுழைந்து சன்னமான குரலில் “அந்த 12ஆவது சீன் பார்த்துடுவோமா…” என்பார்.

அடுத்த கணம், சடாரென எழுந்து அவரவரது பாத்திரங்களாக மாறி நின்றுகொண்டு, ஆவேசம், கிண்டல், காதல், கவலை, ஆச்சரியம், ஆணவம், கெஞ்சல், கேலி, சத்தியம், சபதம் என்று பலவித முகபாவங்களோடு ஆக்‌ஷனும் ரீயாக்‌ஷனுமாக அருணகிரி சாரின் துள்ளுதமிழ் வசனங்களைத் தங்கு தடையில்லாமல் பரபரவென பேசி பஞ்ச் டயலாக்கோடு சீனை முடித்து சட்டையெல்லாம் வியர்த்து நனைந்து மூச்சு வாங்கி நிற்பார்கள்.

சுற்றியிருப்பவர்கள் படபடவென்று கைதட்ட, ஒருவித பெருமிதத்தோடு மெல்ல யதார்த்த நிலைக்குத் திரும்பியபடியே வந்து பெஞ்சில் அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து இரு கண்ணடித்துக்கொள்வார்கள்.

பொதுவாகவே நாடகக் கலைஞர்கள் வெள்ளந்தியானவர்கள். விகற்பமில்லாதவர்கள். சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் நெக்குருகி நின்றுவிடக் கூடியவர்கள். சுயமரியாதைக்காரர்கள்.

அவர்களைக் கண்ட மாத்திரத்தில் சொக்கிப் போய் மேடைக் கலையோடு நானும் இரண்டறக் கலந்தேன். வாலிபாலை கட் பண்ணிவிட்டு, ரிகர்ஸல் – வசன மனப்பாடம் என்று எந்த நேரமும் நாடக நினைப்பாகவே சுற்றினேன். ஒரு கட்டத்தில் இரண்டரை மணி நேர நாடக வசனமும் எனக்கு அத்துப்படியாகிப் போனது.

அருணகிரி சாருக்கு சந்தோஷம். ஆரம்பத்தில் சிப்பாயாக மேடை மூலையில் நின்று கொண்டிருந்த எனக்கு மேலும் மேடை பழக்கிக்கொடுத்து, சோலோ கதாபாத்திரமான துரியோதனன் வேடம் (ஆறு சீன்) கொடுத்து, ஜோடியும் (இன்று சீரியல்களில் சக்கை போடு போடும் நாகலக்ஷ்மி அவர்கள்) கொடுத்து “அப்ளாஸும்” வாங்கிக் கொடுத்தார் ஆசான் அருணகிரி.

சென்னை, சேலம், ஈரோடு, அந்தியூர் என்று பீஷ்மரின் சபதம் நாடகத்தைப் பல ஊர்களில் அரங்கேற்றினோம். எனது நண்பன் தினகரின் “வீனஸ் என்டர்டெயினர்ஸ்” தான் நாடகத்துக்கு இசை. பழம்பெரும் இசையமைப்பாளர் சுதர்சனம் அவர்களின் மகன் “கோழி கூவுது” விஜி எங்களுக்கு இசையமைக்க வருவார். அவருடைய காமெடி சென்ஸ் அலாதியானது.

“உன்னை அழைச்சுக்கிட்டு வந்த ஸ்ரீநிவாசனுக்கு வெறும் துரோணர் தாடி… உனக்கு ஆறு சீன் – ஜோடி…என்னாய்யா .நியாயம்…?” என்று கலாய்ப்பார்.

சீனியர்களோடு சேர்ந்து ரயிலேறி நாடகப் பயணம் போவது என்பது தனி சுகம். சீட்டாட்டமும் – சிரிப்புமாக, கள்ள சரக்கும் – திருட்டு தம்முமாக தடதடவென்று சொர்க்கபுரி நோக்கிப் போகும் நீல ரயில்…

கல்லூரி சேர்ந்து, கல்லூரிப் பேச்சாளனானதும் “வெண்ணிலா இலக்கிய வீதி” என்றோர் அமைப்பைத் தொடங்கி இலக்கிய உலகின் பக்கம் திரும்பிவிட்டேன். அதில், அருணகிரி சாருக்கு என் மேல் வருத்தம்.

**நாடக வாழ்வின் நெகிழ்ச்சி…**

ஒருமுறை சென்னை மியூசிக் அகாடமியில் “பீஷ்மரின் சபதம்” நாடகம்.

அப்போதுதான் எனக்கு புரமோஷனாகி இருந்தது. ஜோடியோடு நடிக்கும் முதல் மேடை. ஆறு சீன். அப்ளாஸ் நிச்சயம் என்பதால் கனவுகளோடு என்னோடு +1 படிக்கும் நண்பர்களை வரச் சொல்லி இருந்தேன்.

நாடகம் தொடங்கப் போகும் நேரம். சன்னமான மணி ஒலியோடு பூஜை ஆரம்பித்து விட்டிருந்தது. பசங்க வந்து சேர்ந்துட்டாங்களான்னு பார்ப்போம் என்று பூஜையில் இருந்து நைஸாக கழன்று, மங்கலான செட் லைட்டில் ஸ்டேஜுக்குள் நுழைந்து, மூடியிருந்த திரையின் இடுக்கை மெல்ல பிரித்து, அந்த ஓட்டை வழியே நண்பர்களை தேடிக்கொண்டிருந்தேன்.

திடீரென்று என் முதுகில் பலமாக ஓர் அடி. அடியென்றால் அடி அப்படியொரு அடி. மூடியிருந்த திரையைக் குடைந்துகொண்டு, மியூசிக் அகாடமியின் கடைசி வரிசைக்கும் கேட்கும்படியான தொரு வேட்டடி.

உடம்பை எட்டாக முறுக்கியபடி அதிர்ந்து திரும்பிப் பார்த்தால்… அருணகிரி சார்!

அவருடைய கண்கள் அப்படி சிவந்திருந்து நான் பார்த்ததேயில்லை. ஓட்டமாய் ஓடிப் போய் பூஜைக்குள் நின்றுகொண்டேன்.

அன்று நாகலக்ஷ்மியும் நானும் போட்டி போட்டுக்கொண்டு நடித்தோம். செம அப்ளாஸ். நாடகம் முடிந்ததும், தேங்காய் எண்ணெயை அள்ளிப் பூசி மேக்கப்பைக் கலைத்த கையோடு,

“ச்சே… என்னதான் இவரு டைரக்டர்ன்னாலும் ஒரு பூஜையில் நிற்காததுக்கு இப்படியா மிருகத்தனமாக முதுகில் அடிப்பார்…?” என்று கோபமும் வெறுப்புமாக முனகிக் கொண்டே, வழக்கமாக அவர் தரும் பத்து ரூபாயைக்கூட வாங்காமல், யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் வேகமாக நடந்தே வீட்டுக்குப் போய்விட்டேன்.

மறுநாள் சாயந்தரம் வாலிபால் கிரவுண்டில் வந்து பிடித்துவிட்டார் அருணகிரி சார்.

“மனசுல எதையும் வெச்சுக்காதப்பா…” என்று அந்தப் பத்து ரூபாயைக் கையில் திணித்தார். வன்மையாக மறுத்து, முகம் திருப்பிக்கொண்டேன்.

“அட வாங்கிக்கப்பா…” என்றவரின் குரலில் தளும்பல் தொனிக்க மெல்லத் திரும்பி அவர் முகம் பார்த்தேன்.

அவர் கண்களில் நீர் கட்டிக்கொண்டிருந்தது.

“சார்…”

“சீராமா… பூஜை முடிஞ்சு திரை விலக்கறதுக்கு முன்ன… அப்படி ஓட்டை வழியா எட்டிப் பார்க்கக் கூடாதுப்பா… அப்படிப் பார்த்தா கூட்டம் வராதுப்பா…”

புரியாமல் அவரைப் பார்த்தேன்.

“ஆமாம்ப்பா… இது வழிவழியா வர்ற நம்பிக்கை…”

விரக்தி தோய்ந்த குரலில் தொடர்ந்தார்…

“முன்ன மாதிரி இப்ப புராண நாடகத்துக்கு ஆதரவில்லப்பா… கூட்டம் வர்றதில்ல… கெஞ்சிக் கூத்தாடித்தான் சபா புடிக்கிறோம்… வர்றது என்னமோ 100 – 150 பேரு… அவங்களும் வராமப் போயிட்டாங்கன்னா..? பிறகு, உயிரைக் குடுத்து எழுதுன என் எழுத்தும், காட்சியமைப்பும் வீணாப் போயிடாதா…? அத்தனை பேர் உழைப்பும் அர்த்தமில்லாமப் போயிடுமேப்பா….”

“மன்னிச்சுடுங்க சார். எனக்கு இவ்வளவெல்லாம் தெரியாது…”

“அதைப் புரிஞ்சுக்கிட்டுத்தான்ப்பா உன்னைத் தேடி வந்தேன்… ஏதோ என் விரக்திக்கு உன்னை கை ஓங்கிட்டேன்… தப்புத்தான்… ஒண்ணும் கோவிக்காம இத வாங்கிக்கோப்பா… நீ நல்லாயிருப்ப…”

தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்து போனார்.

மக்களின் புறக்கணிப்பைத் தாங்கிக்கொள்ள முடியாத கலைஞர்கள்… ஏதேதோ சென்டிமென்ட்டுகளின் மேல் அதை ஏற்றி வைத்துத் தம்மைத் தாமே தேற்றிக்கொள்கிறார்கள் என்பது புரிந்து போக, மனம் விகசித்து சலித்தது.

இன்றும் அதே நிலைதான். இன்னமும் மோசம் என்றுகூட சொல்லலாம்.

அண்டை மாநிலமான கேரளாவில் நாடகக் கலையைக் கொண்டாடுகிறார்கள். சினிமா கலைஞர்கள் முன் வந்து நாடகத்தை ஊக்குவிக்கிறார்கள். அவார்டு கொடுத்து அரவணைக்கிறார்கள். கர்நாடகாவிலும் அப்படியே.

மராட்டிய மண்ணில் நாடகக் கலையை உச்சியில் வைத்துப் போற்றுகிறார்கள். ஒவ்வொரு கார்ப்பரேஷனிலும் ஓர் அரங்கம் இருக்க வேண்டும் என்பது அங்கே விதி. ஒரு நாளைக்கு 50 இடங்களிலாவது நாடகம் நிகழ்ந்தபடி இருக்கும். ஒவ்வொன்றும் தரமான நாடகங்களாக இருக்கும்.

நம்மூரில் அரசியல் கூட்டங்களுக்கு முன்னால் குத்தாட்டம் வைப்பார்கள் அல்லவா? அங்கே, சமூக – குடும்ப நாடகங்களை நிகழ்த்த வைக்கிறார்கள். அப்போதுதான் மக்களிடம் நன்மதிப்பு பெற முடியும் என்பது அந்த மண்ணின் நிலை.

என்னதான் சினிமா – சீரியல் என்றாலும், ரத்தமும் சதையுமாக கண்களுக்கு முன்னால் மேடையில் தோன்றி நடிக்கப்படும் நாடகக் கலைக்கு ஈடான கலானுபவம் வேறொன்றில்லை.

நாடகத் துறையில் இருக்கும் எனது மும்பை நண்பர் சொன்னார், “உங்களது வேலு நாச்சியாரை நீங்கள் மராட்டிய மொழியில் எழுதியிருந்தால் இன்று குறைந்தது மூன்று வீடுகளாவது உங்களுக்குச் சொந்தமாயிருக்கும்…”

தமிழ்நாட்டில் நாடகக் கலையின் நிலை மிக மோசம். சபாக்கள் எல்லாம் ஸ்பான்ஸர்களின் புறக்கணிப்பில் சிதிலமாகிக் கிடக்கின்றன. “கோடை நாடக விழா” நாக்கு வறண்டு தவிக்கிறது

நாடகங்களுக்கு செட் அடித்துக் கொண்டிருந்தவர் திரு.கண்ணன். இன்று நாடகக் கலை நலிவதைக் காணப் பொறுக்காமல் அவரே அவரது சொந்த செலவில் புராண நாடகங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார் என்றால் இன்றைய நாடக உலகின் அவல நிலையை இதைவிட உடைத்துச் சொல்லி விட முடியாது.

நாடகக் கலையினை மீட்டெடுக்க வழியில்லாமல் இல்லை.

அரசாங்கம் இதில் அக்கறை செலுத்த வேண்டும். கலைஞர் ஆக்டிவாக இருந்தபோது இருந்த நிலை, அதன் பிறகு வேகமாகக் குறைந்துகொண்டே வந்து இன்று கலைகளின் மீதான அக்கறை கொஞ்சம்கூட இல்லாமல் போய்விட்டது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது CSR (corporate social responsibility)க்குள் நாடகக் கலையைக் கொண்டு வந்து அரவணைக்க வேண்டும். ஐடி இளைஞர்கள் டாண்டியா நைட்ஸ், வீக் எண்ட் பார்ட்டீஸ் போன்ற உடல் – மன நலத்தை அழிக்கும் கேளிக்கைகளை விட்டு நகர்ந்து நாடகக் கலையின் பக்கம் வர வேண்டும். நாடகக் கலையைப் போன்றதோர் STRESS RELIEF வேறொன்று இல்லை என்று என்னால் உறுதிபட சொல்ல முடியும்.

சினிமா நடிகர்கள், நடிகைகள் ஆளுக்கொரு நாடகத்தை தத்தெடுத்துக்கொண்டு கெஸ்ட் ரோல் செய்ய முன்வர வேண்டும். கேரளாவைப் போல் தரமான நாடகங்கள் வெளிவரச் செய்ய வேண்டும். சேனல்கள் சினிமா அவார்டுகள் வழங்கும்போது சிறந்த நாடகத்துக்கும் சேர்த்துத் தர வேண்டும். தாய்க் கலையான நாடகக் கலையை விட்டுக் கொடுக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து காப்பாற்ற வேண்டும்.

பல புரட்சிகளை அமைதியாகச் செயல்படுத்தி வரும் நடிகர் திரு.விஷால் அவர்களின் கவனத்துக்கு இந்தக் கட்டுரை செல்லுமானால் நிச்சயம் அவரால் நல்வழி ஒன்று பிறக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இதோ, இன்று இதை எழுதும் தருணத்திலும் என் முதுகில் அருணகிரி சாரின் கைச்சூட்டை உணர்கிறேன். அந்தச் சூடு, எண்ணற்ற படைப்பாளிகளின் முதுகுகளில் பரவி நிற்கும் ஆதங்க சூடு.

கலை வழி எழுந்த நம் தமிழ்ச் சமூகம் அந்தச் சூட்டைத் தணிக்க நிச்சயம் ஒத்தடம் இட்டுக் கொடுக்கும். இனிவரும் காலத்தில் தமிழ் நாடகக்கலை புதியதோர் எழுச்சியைப் பெறும் என்று ஆழமாக நம்புகிறேன்.

நல்ல விஷயங்கள் சீக்கிரம் நடக்கட்டும். சேலம், சிவதாபுரத்தில் அடக்கமாகிவிட்ட அருணகிரி சாரின் ஆன்மா குளிரட்டும்!

(கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீராம் சர்மா திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா. கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ovmtheatres@gmail.com)�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share