விஜயசாந்திக்கு ஹேட்ஸ் ஆப்..! Arjun Son Of Vyjayanthi
’எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ பாணியில் ‘அர்ஜுன் சன் ஆஃப் வைஜெயந்தி’ என்ற தெலுங்கு பட டைட்டிலே ‘அடடா’ என்று சொல்ல வைத்தது. இதில் நடித்திருப்பவர்கள் யார் என்று உற்று நோக்க வைத்தது. வைஜெயந்தி என்ற பெயருக்குப் பொருத்தமாக விஜயசாந்தியை விட்டால் வேறு யாரைச் சொல்ல முடியும்? அதற்கேற்றாற் போல, படத்தில் அவரும் இருக்கிறார். அதுவும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவல் தெரிய வந்தது. சரி, அர்ஜுன் என்ற பெயரில் அவரது மகனாக யார் நடிக்கிறார்? அப்பாத்திரத்தில் கல்யாண் ராம் ஆக்ரோஷம் காட்டியிருப்பது ட்ரெய்லரில் நன்றாகத் தெரிந்தது.
யார் இந்த கல்யாண் ராம்? ஜுனியர் என்.டி.ஆரின் சகோதரர்களில் ஒருவர். அவர் நடித்த ’ஜெய் லவ குசா’, ‘தேவரா’ படங்களின் தயாரிப்பாளர். Arjun Son Of Vyjayanthi
மேற்சொன்ன காம்பினேஷனே ‘அர்ஜுன் சன் ஆஃப் வைஜெயந்தி’ மீதான கவனத்தை அதிகப்படுத்தும். அது போதாதென்று ‘காந்தாரா’ இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்தின் பங்களிப்பும் இதில் இருக்கிறது. Arjun Son Of Vyjayanthi
இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்பார்ப்புகள் எட்டிப் பார்க்க, நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜயசாந்தி ஆக்ஷனில் கலக்கியிருக்கிறார் என்று ட்ரெய்லர் சுட்டிக்காட்ட, ‘ஒரு ஆக்ஷன் அதகளம் உறுதி’ என்ற மைண்ட் வாய்ஸ் பலமாக ஒலித்தது.
சரி, இப்படம் அதற்கேற்ற விளைவைத் திரையில் தந்திருக்கிறதா?

’தாய் – மகன்’ பாசம்! Arjun Son Of Vyjayanthi
காவல் துறையில் கெடுபிடியான அதிகாரி என்ற பெயரைப் பெற்றவர் வைஜெயந்தி (விஜயசாந்தி). இவரது மகன் அர்ஜுன் (கல்யாண் ராம்).
தன்னைப் போலவே மகனும் ஐபிஎஸ் அதிகாரி ஆவார் என்று வைஜெயந்தி நினைக்கிறார். அதற்கேற்ப, அர்ஜுனும் தேர்வுகளை எழுதுகிறார். Arjun Son Of Vyjayanthi
ஆனால், இடையே சில சம்பவங்கள் நிகழ்கின்றன. அதில், முதலாவதாக வைஜெயந்தி கணவரின் மரணம் நிகழ்கிறது. அதன் தொடர்ச்சியாக, அதற்குக் காரணமானவர்கள் யார் என்று தெரிய வருகிறது. Arjun Son Of Vyjayanthi
அவர்களை அர்ஜுன் நேருக்குநேர் சந்திக்கிறபோது, அவரது ஐபிஎஸ் கனவு பறி போகிறது. அதனால் தாயும் மகனும் நேரெதிராக நிற்கிற சூழல் உருவாகிறது.
‘சட்டத்தின்படி நடக்க வேண்டும்’ என்கிற தாய் வைஜெயந்தியிடம், ‘என்னை நம்பியவர்களுக்காகச் சட்டத்தைக் கையில் எடுப்பேன்’ என்று மல்லுக்கு நிற்கிறார் அர்ஜுன். அது வைஜெயந்திக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.
ஆனாலும், தாயின் மீதான அர்ஜுனின் பாசத்தில் கொஞ்சம் கூடக் குறைவில்லை. அது வைஜெயந்திக்கும் தெரியும். ஆனாலும், அவரால் தன் மகனை மன்னித்து மனதார ஏற்றுக்கொள்ள முடியவில்லை. Arjun Son Of Vyjayanthi
அனைத்தையும் மீறி, அவர்களுக்கு இடையேயான மோதல் முடிவுக்கு வந்ததா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி. ஒரு கமர்ஷியல் திரைப்படக் கதையில் இருந்தாக வேண்டிய வில்லன்கள் அவர்களது இணைப்பிற்கு எவ்வாறு உதவுகின்றனர் என்றும் சொல்கிறது.
அந்த வில்லன்களின் செயல்பாடுகள் எப்படிப்பட்டவை என்று ஆங்காங்கே சொல்லிவிட்டு, பெரும்பகுதியைத் தாய் மகனின் பாசப்பிணைப்பைக் காட்டுவதற்காகச் செலவிட்டிருக்கிறார் இயக்குனர் பிரதீப் சிலுகுரி. அது க்ளிஷேவாக இருக்கிறதா அல்லது திரையில் பார்க்கச் சுவாரஸ்யமானதாக இருக்கிறதா?
இந்த கேள்விக்குப் பதில் சொல்வதைப் பொறுத்து, இப்படம் உங்களுக்கு பிடித்தமானதாக அல்லது பிடிக்காததாக மாறும். Arjun Son Of Vyjayanthi

சத்தம் அதிகம்! Arjun Son Of Vyjayanthi
‘அர்ஜுன் சன் ஆஃப் வைஜெயந்தி’ படத்தின் மிகப்பெரிய ப்ளஸ், விஜயசாந்தி. அம்மணி இந்த வயதிலும் ‘ரோப்’ கட்டி சண்டையிடும் காட்சிகளில் அசராமல் ‘டூப்’புக்கு வேலை வைக்காமல் கேமிரா முன்னே நின்றிருக்கிறார். அந்த அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் கண்டிப்பாக ‘ஹேட்ஸ் ஆப்’ சொல்லியாக வேண்டும். ஒப்பனையை மீறிச் சுருக்கங்கள் முகத்தில் தெரிந்தாலும், பெரும்பாலான காட்சிகளில் சட்டென்று ஈர்க்கிறது அவரது நடிப்பு.
எந்தவிதத்திலும் குறைவில்லாமல் விஜயசாந்தியின் இருப்பைத் திரையில் காட்ட இடம் அளித்ததற்காகவே, நாயகன் கல்யாண்ராமின் பங்களிப்பைப் பாராட்டியாக வேண்டும். சகோதரர் ஜுனியர் என்.டி.ஆர். போலவே இவரும் சிறப்பான ‘கமர்ஷியல்’ பட நடிகர்.
இந்தப் படத்தில் ஆக்ரோஷத்தை காட்டுகிற காட்சிகளில் மனிதர் அசரடிக்கிறார். கதையில் அதற்கேற்றவாறு காட்சிகள் சிறப்பாக அமையா காரணத்தால், அவரது தனித்துவம் இம்முறையும் கவனிக்கப்படாமல் போயிருக்கிறது.
நாயகி சாயி மஞ்ச்ரேகர் அழகாக இருக்கிறார். அதற்கேற்ப திரையில் அழகாக வந்து போயிருக்கிறார்.
இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த், ’கேஜிஎஃப்’ அவினாஷ், சந்தீப் வேத் உட்படப் பலர் நடித்திருக்கின்றனர்.
சல்மான் கான் சகோதரர் சோஹைல் கான் இதில் வில்லனாக நடித்திருக்கிறார். டபிள்யூடபிள்யூஎஃப்பில் வரும் வீரர் போன்று தனது முறுக்கேறிய உடலைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு கேமிரா முன்னே வந்து போயிருக்கிறார். அவ்வளவுதான்.
இது போக சில டஜன் நடிகர் நடிகையர் இதில் தோன்றியிருப்பார்கள்.
அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை தியேட்டரை அதிர விடுகிறது. அடுத்தடுத்த காட்சிகள் ஏன், எதற்கு, என்ன காரணத்திற்காக வருகின்றன என்ற கேள்வியை மறக்கடிப்பதில் அது ஒரு விசையாகச் செயல்பட்டிருக்கிறது.
அவர் தந்த பாடல்களும் கூடச் சட்டென்று நமக்கொரு ஆசுவாசத்தைத் தருகின்றன.
ராம்பிரசாத்தின் ஒளிப்பதிவு வழக்கமான தெலுங்கு பட அனுபவத்தை நமக்குத் தந்திருக்கிறது.
முன்பின்னாக நகரும் காட்சிகளைக் கொண்டு, குழப்பமின்றித் திரையில் கதை சொல்வதில் தடுமாறியிருக்கிறது தம்மிராஜுவின் படத்தொகுப்பு,
இன்னும் கலை இயக்குனர் பிரம்ம கதலி உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இப்படத்தில் இருக்கிறது.
இயக்குனர் பிரதீப் சிலுகுரியின் கதைக்கு, அவருடன் இணைந்து திரைக்கதை வசனம் அமைத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் விசா. பழைய கதைக்கு மிகப் பழமையான முறையில் காட்சிகளை அமைத்திருப்பதால், தியேட்டரில் இருக்கை சூடாவதுதான் மிச்சம்.
சில வகை ‘க்ளிஷே’ காட்சிகள் ரசிகர்களை எப்போதும் ஈர்க்கும்படியாக இருக்கும். இதிலும் அப்படி ஓரிரு காட்சிகள் உண்டு. ஆனால், அவற்றைப் புறந்தள்ளும்விதமாக ‘வன்முறை’ தோய்ந்த சண்டைக்காட்சிகள் இதிலிருக்கின்றன.
அவை நம்மை ‘போதும்டா.. போயிருலாம்டா..’ என்று ’சந்திரமுகி’ வடிவேலு போன்று நம்மை நடுங்க வைக்கின்றன.
அதிலும் பின்னணி இசையோடு போட்டியிடுவது போலக் கதாநாயகனும் வில்லன் கோஷ்டியும் சத்தமாக வசனம் பேசுவது காதில் ‘கீய்..’ என்ற ஒலியைத் தானாக உருவாக்குகின்றன. இடைவேளையின்போதும், படம் முடிந்தபிறகும் அதனைத் தெளிவாக உணர முடிகிறது.
என்னதான் சத்தமும் சண்டையும் சில நேரங்களில் கொஞ்சமாய் நடிகர் நடிகையரின் ஆபாசமும் இடம்பெற்றாலும், தெலுங்கு கமர்ஷியல் படங்களை ‘அழகியல் ரசனை’யோடு உருவாக்குகிற சில படைப்பாளிகள் எக்காலத்திலும் உண்டு என்பதை மறுக்க முடியாது. அவர்களுக்காகவே, தமிழில் ‘டப்’ செய்யப்பட்ட படங்களை ரசிக்கிறவர்களும் உண்டு.
ஆபாக்ம் ‘அர்ஜுன் சன் ஆஃப் வைஜெயந்தி’யில் அப்படிப்பட்டவர்களுக்குத் தீனி குறைவு.
யோசித்துப் பார்த்தால், இந்தப் படம் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஓரளவுக்கு கவனிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. அதைவிடுத்து, இப்போது வெளியாகி விஜயசாந்தி போன்ற லெஜண்ட்களின் உழைப்பை வீணாக்கியிருப்பது வருத்தமான விஷயம் தான்.
முக்கியமாக, கல்யாண்ராமின் தோற்றப் பொலிவுக்கும் நடிப்புத்திறமைக்கும் ஏற்ற திரைக்கதைகளைப் படைக்காமல் ரசிகர்களான நம்மை இப்படி ‘பஞ்சர்’ ஆக்குகிறார்களே என்ற ஆத்திரத்தை ஊட்டியிருக்கிறது பிரதீப் சிலுகுரி அண்ட் டீம்.
’இந்த விமர்சனம் சரியா’ என்று அறிய விரும்புபவர்கள் தியேட்டர்களில் இப்படத்தை உடனடியாகக் காணலாம். பொறுமை காக்க விரும்புபவர்கள் சில வாரங்கள் கழித்து ஓடிடியில் கண்டு, சமூகவலைதளங்களில் அது குறித்து ‘பொங்கலாம்’..!