தென்காசி மாவட்டம் என்று சொன்னாலே தென்றல் காற்று, குற்றால சாரல், பார்க்கும் இடமெல்லாம் வயல்வெளி, பார்டர் கடை பரோட்டா என அனைவருக்கும் பிடித்த சுற்றுலா தலங்களில் முதன்மையான ஒன்றாக தென்காசி மாவட்டம் திகழ்ந்து கொண்டு இருக்கிறது.
தமிழக கேரள எல்லையான, செங்கோட்டைக்கு அடுத்து வரும் ஊரான ஆரியங்காவு பகுதியில் உள்ளது இந்த பாலருவி. இந்த அருவியில் கீழே நின்று குளிக்கும் போது மேலே பார்த்தால் பால் விழுவது போன்று இயற்கை அழகில் இருக்கும் என்பதால் இதற்கு பாலருவி என்று பெயர் வந்தது.
எப்படி போகலாம் இந்த பாலருவிக்கு ?
கொல்லம் – செங்கோட்டை சாலையில் கொல்லம் நகரிலிருந்து 75 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியை 4 கி.மீ தூரம் காட்டுப்பகுதி வழியாக மலையேறி சென்று மட்டுமே சென்றடைய முடியும்.
சூழலியல் சுற்றுலா வளாகத்துக்கு அருகிலேயே உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு சென்று வருவது கூடுதல் பரவச அனுபவமாக இருக்கும்.
இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிலும் பசுமைமாறாக்காடுகள் நிரம்பியுள்ளதால் இயற்கை ரசிகர்களை வசியப்படுத்தும் வகையில் இப்பகுதி தோற்றமளிக்கிறது.
300 அடி (91 மீ) உயரம் உள்ள இந்த நீர்வீழ்ச்சியை நோக்கிய இயற்கைப்பயணம் மேற்கொள்வதற்கு உதவியாக உள்ளூர் காட்டுச்சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளனர்.
பயண உபகரணங்கள் மற்றும் பாதை வரைபடங்கள் போன்றவற்றையும் இங்குள்ள வனத்துறை கிளை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
இயற்கையின் மையப்பகுதியில் வீற்றிருக்கும், நிசப்தம் நிலவும் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதிக்கு தக்க துணை மற்றும் பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்வது அவசியம்.
தமிழக வனத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு
இந்த நிலையில் தமிழக வனத்துறை சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் பாலருவிக்கு செல்லும் சாலைகள் மறு சீரமைக்கப்பட்டு உள்ளது.
வயது முதிர்ந்தவர்கள் தன் வயதின் காரணமாக அருவிகளில் குளிக்க முடியாமல் ஏக்கத்தோடு பார்ப்பதை நாம் பார்த்திருப்போம். இந்த அருவியில் அவர்களும் அமர்ந்து குளிக்கும் விதமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண்கள், குழந்தைகள் குளிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அருவிக்கு செல்லும் சாலையில் இருந்த குண்டும் குழியும் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து சீரமைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த அருவிக்கு செல்வோருக்கு இது பெரிதும் உதவியாக இருக்கிறது என்று சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.
மேலும் குற்றாலத்தில் உள்ளது போல ஆண்கள்- பெண்கள் என இரு பிரிவாக பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு குளிப்பதற்கு நவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. பெண்களுக்கு உடை மாற்றும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பாக வனத்துறை சார்பில் ஊழியர்களும் நியமிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஊழியர்கள் பரிசோதனை செய்த பின்னர் தான் வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் வாகனத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த வாகனத்தில் பெரியவர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.70, சிறியவர்களுக்கு ரூ.30 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பாலருவியில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட செய்தியை அறிந்த தமிழக, கேரள சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் விடுமுறை நாட்களில் குளித்து மகிழ்கின்றனர்.
சரவணன்
கொலை செய்ய முயன்ற தந்தை: புத்திசாலித்தனமாக உயிர் பிழைத்த சிறுமி!
நம்பிக்கையில்லா தீர்மானம்: மோடிக்கு காங்கிரஸ் மூன்று கேள்விகள்!